கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது.. அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!
சென்னை: மேகதாது விவகாரம் குறித்து நாளை காலை முதல்வர் மு.க ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் பாதிக்கப்படும் என்பதால் தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசியல்வாதிகள் கூறிவந்தாலும் அதை எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு உறுதிபட கூறி வருகிறது.

இதனிடையே, கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத்தைச் சந்தித்து மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து அவர் நீர்வளத்துறை அமைச்சரிடம் கடிதம் அளித்துள்ளார்.
அந்த கடிதத்தில், கர்நாடக அரசின் நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், நதிநீர்ப் பங்கீடு பிரச்சினைக்கு புதிதாக ஒரு தீர்ப்பாயத்தை ஏற்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேகாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாது விவகாரம் குறித்து முதல்வருடன் நாளை காலை ஆலோசனை நடத்த இருப்பதாகவும் அதன்பிறகு டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்திலும் ஆலோசிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "காவிரி நதி நீர் விவகாரத்தை கையாளும் பொறுப்பை காவேரி மேலாண்மை வாரியத்திடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்து விட்டது. எனவே வழக்கு தீர்ந்து இதுதான் முடிவு என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, அவர்கள் (கர்நாடகா) நிலைமை என்ன, நீர் நிலமை என்ன என்பதெல்லாம் எனக்கு தெரியாது. இருந்தாலும் நாங்கள் கர்நாடகாவிடம் போய் பேச முடியாது.
அப்படி பேசுவது சட்டப்படி தவறு. இந்த விவகாரத்தை கவனிப்பதெற்கென்று உச்ச நீதிமன்றத்தில் வாரியம் அமைக்கப்பட்டு இருக்கிறது. எனவே காலையில் முதல்வரை சந்தித்து விட்டு டெல்லி சென்று காவேரி மேலாண்மை ஆணைய அதிகாரிகளை சந்திப்பேன். கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட எந்த காரணத்தை கொண்டும் தமிழகம் அனுமதி கொடுக்காது. சட்டப்படியும் அது முடியாது" என்றார்.












Click it and Unblock the Notifications