சொட்ட சொட்ட நனைய போகும் ஊர்கள்! 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட்!
சென்னை : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், இன்று தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் முடிவடைந்துவிட்ட நிலையிலும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.
அதே நேரத்தில் மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 16 மாவட்டங்களில்.. செம மழை காத்திருக்கு! உங்க ஊர் இருக்கா பாருங்க
இன்று கனமழை
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழைக்கு வாய்ப்பு
நாளை முதல் 18 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை
19ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் (பெரம்பலூர்) 11, மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), வாணியம்பாடி ARG (திருப்பத்தூர்) தலா 7, டேனிஷ்பேட்டை (சேலம்), தாளவாடி (ஈரோடு), வேடசந்தூர் (திண்டுக்கல்) தலா 6, பென்னாகரம் (தருமபுரி), ஏற்காடு (சேலம்), சூளகிரி (கிருஷ்ணகிரி), திருச்சி AP (திருச்சி) தலா 5, பாப்பாரப்பட்டி KVK (தருமபுரி), வீரகனூர் (சேலம்), பாடலூர் (பெரம்பலூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி) 4, அகரம் சீகூர் (பெரம்பலூர்) தலா 4 செண்டி மீட்டரில் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று இலட்சத்தீவு பகுதி, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல், இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை இலட்சத்தீவு பகுதி, கேரளா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னர் வளைகுடா, இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை மறுநாள் வடக்கு கேரளா - தெற்கு கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.