சென்னை மக்களே உஷார்.. நவ.11, 12 தேதிகளில் மிக கனமழை பெய்யும்! ஆரஞ்ச் அலர்ட் விடுத்த வானிலை மையம்
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு எதிரொலியால் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழகம் மற்றும் புதுவைக்கு வரும் 11, 12 ஆகிய தேதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறியது.
இது அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வரும் 12ம் தேதிக்குள் வடமேற்கு தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து வரக்கூடும்." என்று கூறப்பட்டுள்ளது.
குடையுடன் வெளியே போங்க - தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
3 நாட்கள் கனமழை
5 நாட்களுக்கு கனமழை: இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி 13 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவை
நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இரு நாட்கள் மேக மூட்டம்
சென்னையில் இருநாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்
இதுகுறித்து வானிலை மையத்தின் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அது போல் 11, 12ஆம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கும் புதுவைக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
4 விதமான அலர்ட்கள்
நான்கு வித்தியசமான அலர்ட்கள் நான்கு விதமான காலநிலைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அவைகள் பொதுவாக பச்சை எச்சரிக்கை (Green Alert), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert), ஆரஞ்ச் எச்சரிக்கை (Amber Alert), மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) ஆகும்.
மஞ்சள் அலர்ட்
வானிலை அடுத்த சில நாட்களில் மிகவும் மோசமாக இருப்பதை தெரிவிப்பதே இந்த மஞ்சள் எச்சரிக்கை ஆகும். இந்த கால கட்டத்தில் 65 மில்லி மீட்டர் அளவுக்கு மேல் மழை பதிவாகும். இது போன்ற நேரங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது நல்லது.
ஆரஞ்ச் மற்றும் பச்சை அலர்ட்
ஆரஞ்ச் எச்சரிக்கையின் போது வானிலை மோசமடைய அதிக வாய்ப்புள்ளது. சாலை, மின் இணைப்பு சில இடங்களில் துண்டிக்கப்படும். இதனால் தாழ்வான பகுதிகளில் அதிக சேதங்கள் ஏற்படும் என்பதால் மக்கள் வேறு இடத்திற்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்பதாகும். எந்த எச்சரிக்கையும் கிடையாது என்பதை விளக்க பச்சை எச்சரிக்க பயன்படுத்தப்படுகிறது.
ரெட் அலர்ட்
வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என்பதைதான் ரெட் அலர்ட் குறிக்கிறது. இந்த அலர்ட் விடுக்கும் போது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்படும். உள்ளூர்நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி அபாயகரமான பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்பதுதான் ரெட் அலர்ட்.