காலையிலேயே சென்னைவாசிகளுக்கு ஷாக் செய்தி.. இன்று மெட்ரோ ரயில் ஓடாது..! எந்த ரூட்டில் தெரியுமா?
சென்னை: சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான நேரடி மெட்ரோ ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது பயணிகளை அவதிக்கு உள்ளாக்கி உள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், மக்கள் பெருக்கம் காரணமாக சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக பொதுப் போக்குவரத்துக்கு அரசு பேருந்து, மின்சார ரயில் சேவை, மெட்ரோ சேவை வழங்கப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் மெட்ரோ ரயில் சேவை போதிய வரவேற்பு பெறாத நிலையில் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
தற்போது இரண்டு லைன்களில் அதாவது மெட்ரோ ரயில் சேவையானது நீலம், பச்சை உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. பிங்க் வழித்தட பணிகள் நடைபெற்று வருகின்றன.
2015ஆம் ஆண்டு ஜூன் முதல் கோயம்பேடு - ஆலந்தூர் மெட்ரோ வழி தடமும், 2016 ஆம் ஆண்டு சின்னமலை முதல் விமான நிலைய வழித்தடமும், ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையிலும் மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக மெட்ரோ ரயில் சேவையானது நீட்டிக்கப்பட்டு தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலும், பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என இரண்டு வழித்தடங்களில் சுமார் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் மாதாவரம் - சோளிங்கநல்லூர்- சிறுசேரி சிப்காட் - பூந்தமல்லி - லைட் ஹவுஸ் என இரண்டாம் கட்டம் திட்டமும் செயல்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் மெட்ரோ ரயில்களில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சென்னைவாசிகளுக்கு காலையிலேயே அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வந்துள்ளது.
அதாவது இன்று சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை இயக்கப்படும் நேரடி மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் விமான நிலையம் இடையே நீல நிறத் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை இன்று நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ அறிவித்துள்ளது.
மேலும் விமான நிலையம் செல்ல வேண்டிய பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் சென்று அங்கிருந்து பச்சை வழித்தடத்தில் மாறி பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வேலைக்குச் செல்வோர் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications