சென்னை மெட்ரோ வாட்டர் கட்டணம் உயர்வு.. 6 ஆண்டுகளுக்கு பிறகு குடிநீர் லாரி கட்டணம் அதிகரிப்பு
சென்னை: சென்னையில் குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு டேங்கர் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் கட்டணம் உயர்ந்துள்ளது. 6,000 லிட்டர் லாரி தண்ணீர் ரூ.475ல் இருந்து ரூ.550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 9,000 லிட்டர் லாரி தண்ணீர் ரூ.700ல் இருந்து ரூ.825 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
6 ஆண்டுகளுக்கு பிறகு கட்டணத்தை உயர்த்தி உள்ளது சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம். உற்பத்தி செலவு அதிகரிப்பு, டேங்கர் லாரி வாடகை உயர்வு உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி கட்டணத்தை உயர்த்தி உள்ளது மெட்ரோ வாட்டர் நிறுவனம்.

சென்னை மாநகராட்சியில், நாள்தோறும் 106 கோடி லிட்டர் குடிநீரை, சென்னை குடிநீர் வாரியம் குழாய் வாயிலாக விநியோகித்து வருகிறது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு தேவைப்படுவோர், முன்பதிவு செய்து கட்டண அடிப்படையில் குடிநீரை வாங்கி வருகின்றனர்.
சென்னை குடிநீர் வடிகால் வாரியம் லாரிகள் மூலம் வழங்கும் குடிநீரை நம்பியே தலைநகர் முழுவதும் வீடுகளும் அடுக்கு மாடி குடியிருப்புகளும் உள்ளன. தினமும் 1,000 லாரிகளில் மெட்ரோ வாட்டர் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, முன்பதிவு லாரி குடிநீரின் விலையை, சென்னை குடிநீர் வாரியம் உயர்த்தி உள்ளது.
குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிக்கு ரூ.75-ம், 9,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிக்கு ரூ.125-ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம். 6,000 லிட்டர் லாரி தண்ணீர் ரூ.475ல் இருந்து ரூ.550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 9,000 லிட்டர் லாரி தண்ணீர் ரூ.700ல் இருந்து ரூ.825 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், 12,000, 18,000 லிட்டர் லாரி குடிநீரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
மேலும், வணிக பயன்பாட்டுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி ரூபாய் 735ல் இருந்து 1,025க்கும், 9,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி ரூபாய் 1,050ல் இருந்து 1,535 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 12,000, 18,000 லிட்டர் லாரி குடிநீரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.












Click it and Unblock the Notifications