சென்னையில் மெட்ரோ பணிகள் விறுவிறு.. இடிக்கப்படும் 2 பாலங்கள்.. இனி டிராபிக் எப்படி?
சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் சென்னையில் விறுவிறுப்படைந்துள்ள நிலையில் நகரின் பிரபலமான இரண்டு பாலங்களை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக இடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தவும் மெட்ரோ ரயில்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. சென்னையின் முக்கிய சாலைகளில் மெட்ரோ ரயில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்து. முதல் கட்டத்திட்டத்தில் 54.1 கிலோமீட்டர் தொலைவிற்கு பச்சை மற்றும் நீலம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. 2015ல் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயிலில் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 63000 கோடியில், 116.1 கிலோ மீட்டருக்கான 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2ம் கட்டத்தில் ஊதா,ஆரஞ்சு, சிவப்பு என 3 ரயில் வழித்தடங்கள் அமைய உள்ளது இதில் 45.4 கிலோமீட்டர் தொலைவில் மாதவரம் முதல் சிப்காட் சிறுசேரி வரையில் ஊதா வழித்தடம் அமைய உள்ளது.
அதே போல் மாதவரம் பால் பண்ணையில் இருந்து தரமணி வரை சுரங்கப்பாதையாகவும், நேரு நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சிறுசேரி சிப்காட் ரயில் நிலையம் வரை உயர்மட்ட பாதையாகவும் அமைய உள்ளது. இந்த வழித்தடத்தில் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள அஜந்தா மற்றும் அடையாறு திரு.வி.க பாலத்தை அடுத்துள்ள அடையாறு மேம்பாலம் அமைந்துள்ள இடத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் வருகின்றன. இந்த 2 பாலங்களும் மெட்ரோ பணிகளுக்காக இடிக்கப்பட உள்ளது.
பொதுவாக ஒரு கிலோமீட்டருக்கு ஒரு மெட்ரோ ரயில் நிலையம் என்ற கணக்கின் படி மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த 2 பாலங்களுக்கு முன்னும் பின்னும் வளைவுகள் வருவதால் சுரங்க ரயில் நிலையத்தை மாற்றி அமைத்தால் 2 மெட்ரோ ரயில் நிலையத்திற்கான தொலைவு ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவாக அமைந்துவிடும் என்பதாலும் பாலங்கள் இடிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் அமைய இருக்கும் ராயப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அடையாறு மெட்ரோ ரயில் நிலையம் பணிகளுக்காக அஜந்தா பாலத்தில் 210 மீட்டர் முழுவதும் இடிக்கப்பட உள்ளது.அதே போல் அடையாறு மேம்பாலம் தொடர்ந்து போக்குவரத்து பயன்பாட்டோடு ஒரு பாதியாக மட்டுமே இடிக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயிலின் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த 2 பாலங்களும் புதிய மாற்றுத் திட்டங்களோடு அடுத்த 3 ஆண்டுகளுக்குள் சீரமைத்து கட்டி தரப்படும் என மெட்ரோ துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications