வெள்ளக்காடான ஒகேனக்கல்.. 1.60 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு.. 103 அடியை எட்டும் மேட்டூர் அணை
சென்னை: கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கபட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒக்கேனக்கல் வெள்ளக்காடானது. மேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியுள்ளது. ஒரு சில நாட்களில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 1.60 லட்சம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து நேற்று காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மாலை 6 மணிக்கு வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இரவு 8 மணி நிலவரப்படி 1 லட்சத்து 41 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள், நடைபாதை, உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஒகேனக்கல்லில் அருவிகளே தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீர் வரத்த்து அதிகரித்துள்ளதால், காவிரி கரையோரங்களில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தபடி தண்ணீர் செல்கிறது.
எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. காவிரியில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நாள்தோறும் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வந்தது. நீர்வரத்து நேற்று மதியம் வினாடிக்கு 1 லட்சத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதையொட்டி மேட்டூர் அணை நேற்று 71-வது முறையாக 100 அடியை எட்டியது. பின்னர் இரவு 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 103.13 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 23 ஆயிரத்து 184 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதனால் அணையின் 16 கண் பாலம் மதகுகளின் அடிப்பகுதியை தொட்டவாறு தண்ணீர் கடல் போல காட்சி அளிக்கிறது. கர்நாடக அணைகளில் வினாடிக்கு 1.60 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை க்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள்னர்.












Click it and Unblock the Notifications