இந்து அறநிலையத் துறையின் சொத்து பராமரிப்பு விதிகள் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தில் இருக்கும் கோவில் சொத்துக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விதிகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு தற்போது இந்து சமய அறநிலையத் துறை சொத்துக்களை மீட்பதில் தீவிரம் காட்டி வருகிறது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவிலுக்கு சொந்தமான சொத்துக்குள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருகிறது. அதோடு கோவில் சொத்து விவரங்களும் இந்து சமய அறநிலையத் துறை இணைய பக்கத்தில் ஏற்றப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் கீழ், கோவில் சொத்துக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளில் சொத்துக்கள் பாதுகாப்பு, பராமரிபபு, நிர்வாகம் தொடர்பான விளக்கங்கள் இடம்பெறாத காரணத்தால் இந்த விதிகளை செல்லாது என அறிவிக்கக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், புதிய விதிகள் வகுக்கும் வரை, கோவில்களில் கட்டுமானம், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். சொத்துக்கள் உரிமை தொடர்பாக புதிய விதிகளை உடனே வகுக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, சட்ட விதிகளை ரத்து செய்வதற்கான எந்த காரணங்களும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதேசமயம், சட்டத்தில் உள்ள தேவையற்ற விதிகளை நீக்கி, புதிய விதிகளை வகுக்க வேண்டும் எனவும், கோவில்களின் சொத்துக்கள் முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், கோவில்களை முறையாக பாதுகாக்க வேண்டும், அதன் கட்டிடக்கலை மதிப்புக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications