உங்களுக்கு நிர்வாகிகள் ஆதரவே இல்லையே! ஓபிஎஸ்ஸுக்கு உயர் நீதிமன்றம் வைத்த "குட்டு".. இப்படி ஆகிடுச்சே
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை இதை எதிர்த்து தாக்கல் செய்த ஓ .பன்னீர்செல்வம் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில் ஓ பன்னீர்செல்வம் தரப்பை உயர் நீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளது.
Recommended Video
ஜூலை 11ம் தேதி ( இன்று) நடந்து வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்
ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை நிராகரித்ததுடன், கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்தும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மனு தாக்கல்
இந்நிலையில், ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவர் தனது மனுவில், கட்சியில் எந்த விவாதமும் நடத்தாமல், ஒற்றைத் தலைமை கொண்டு வரும் வகையில் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற இருந்ததால் அதை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றை நீதிபதி
உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை மீறி, ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை நிராகரித்ததுடன், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதியில்லாமல் தமிழ்மகன் உசேனை நிரந்தர தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
அதேபோல ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு நடத்தப்படும் என அவைத்தலைவர் அறிவித்தது கட்சி விதிகளுக்கு முரணானது எனவும், கட்சி விதிகளின்படி பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட எந்த கூட்டங்களை கூட்டுவதாக இருந்தாலும் அதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

ஜூலை 11ம் தேதி
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தவிர வேறு எவருக்கும் பொதுக்குழுவை கூட்ட அதிகாரமில்லை எனவும், இரு பதவிகளின் அதிகாரத்தை அவைத்தலைவரோ, தலைமைக் கழக நிர்வாகிகளோ பறித்துக் கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார். ஒற்றைத் தலைமை கொண்டு வரும் வகையில் ஜூலை 11ல் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர முயற்சிப்பதாகவும், அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

ஒப்புதல்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தொடர்ந்து செயல்பட முடியாது எனக் கூறி, இரு பதவிகளின் அதிகாரத்தை தலைமைக் கழக நிர்வாகிகள் பறித்துக் கொள்ள முடியாது எனவும் ஜூன் 23ல் இரு பதவிகளுக்கும் ஒப்புதல் கோரி எந்த தீர்மானங்களும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் ஜூலை 11ல் கூட்டப்படும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

தீர்ப்பு
இந்த மனுவில் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்து இன்று இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பமே மேலோங்கி இருக்கும் எனவும், பொதுக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள 2,665 பேரில் 2,100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட விருப்பம் தெரிவித்துள்ளதால் பொதுக்குழுவை கூட்டலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டார்.

கூட்டத்திற்கு அனுமதி
அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், கட்சி விதிகளின்படியும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் எனவும், விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உத்தரவிட்டு, பன்னீர்செல்வம் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்

தீர்ப்பு என்ன
இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு விவகாரம் பின்வருமாறு,
சட்டப்படி பொதுக்குழு கூட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி விட்டது
அதற்கு முரணாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது
சட்ட விதிகளுக்குட்பட்டு நடத்தவில்லை என்றால் உச்சநீதிமன்றம் தான் அந்த உத்தரவின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தான் பரிசீலிக்க முடியுமே தவிர உயர் நீதிமன்றம் அல்ல.
பொதுக்குழு கூட்டத்தை கூட்ட கூடாது என்ற கோரிக்கையை தவிர வேறு எந்த இடைகால நிவாரணமும் ஓ.பி.எஸ் தரப்பில் கோரப்படவில்லை..
பொதுக்குழு கூட்டம் சட்டப்படி கூட்டப்பட மாட்டாது என்று ஓ.பி.எஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன் என தெரியவில்லை..
எனவே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் தயங்கவில்லை..
2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 பேர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் நடத்த ஜூன் 23 அறிவிக்கப்பட்டது

ஓபிஎஸ் மீது விமர்சனம்
எனவே 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதாகவே கருத முடியும்..
ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான் மேலோங்கி இருக்கும்.. பெரும்பான்மையனரின் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.
கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர் உறுப்பினர்களை சமாதானம் செய்து கட்சி நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உறுப்பினர்களின் நம்பிக்கையை பெரும் வகையில் பொதுக்குழுவை அனுகுவதை விடுத்து ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுகிறார்.

கடும் விமர்சனம்
நீதிமன்றத்தின் மூலமாக சாதிக்க முயற்சிக்கிறார். பொதுக்குழுவில் தங்கள் குறைகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை அனுகலாம்
சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது.
ஓ.பி.எஸ் இடைக்கால நிவாரணத்தை ஏற்க முடியாது.. என்று கூறி அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர் என்று ஓ பன்னீர்செல்வம் மீது உயர் நீதிமன்றமே கடும் விமர்சனங்களை வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications