திடீரென தாறுமாறாக ஓடிய ஆட்டோ.. டிரைவருக்கு மாரடைப்பு.. நடு ரோட்டில் பரபரப்பு!
சென்னையில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
தாம்பரம்: ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த ராஜேந்திரனுக்கு நடுவழியில் மாரடைப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு வயது 50 ஆகிறது. அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
தினமும் காலையில் 2 குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு செம்பாக்கத்தில் உள்ள ஸ்கூலில் விட்டு விடுவது வழக்கம். அப்படி போகும்போது குழந்தைகளுடன் அவர்களின் அம்மாவும் உடன் வருவார்.
குழந்தைகளின் அம்மா
இன்றும் வழக்கம்போல குழந்தைகளை ஸ்கூலில் விட்டுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். வண்டியில் குழந்தைகளின் அம்மா அமர்ந்திருந்தார். அப்போது ஆட்டோ 'கேம்ப்' ரோட்டில் வந்து கொண்டிருந்தது.
தாறுமாறாக ஓடியது
அந்த நேரத்தில் ராஜேந்திரனுக்கு திடீரென நெஞ்சு வலி வந்துவிட்டது. அவரால் தொடர்ந்து வண்டியை ஓட்ட முடியவில்லை. அதனால் நடுரோட்டிலேயே ஆட்டோ தாறுமாறாக ஓடியது. இதை சாலையில் சென்று கொண்டிருந்தவர்களும், மற்ற வாகன ஓட்டிகளும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.
மாரடைப்பு
பிறகு குறுக்கும் நெடுக்குமாக ஓடிய ஆட்டோ சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. இதனை பார்த்து பொதுமக்கள் எல்லோருமே திரண்டு ஓடிவந்து விட்டார்கள். பள்ளத்துக்குள் வீழ்ந்து கிடந்த ஆட்டோவை தூக்கி நிறுத்தி பிறகு ராஜேந்திரனை மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் மயங்கி விட்டார்.
காலில் அடி
இதையடுத்து பொதுமக்களே ராஜேந்திரனை தூக்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளத்தில் கவிழ்ந்ததால், ஆட்டோவில் இருந்த பெண்ணுக்கு காலில் அடிபட்டது. அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.