இனி பேங்க் போக வேண்டியதில்லை.. ரேஷன் கடைகளில் வரும் சூப்பர் மாற்றம்! மூத்த குடிமக்கள் ஹாப்பி
சென்னை: வங்கிகளை அணுக முடியாத கடைநிலை மக்களுக்கும் அதன் சேவைகளை கொண்டு சேர்க்க, இனி ரேஷன் கடைகளில் மினி ஏடிஎம்கள் செயல்பாட்டுக்கு வர இருக்கின்றன.
இந்தியா, சர்வதேச அளவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், குக்கிராமங்கள், மலை பகுதிகளில் உள்ள சிற்றூர்களில் உள்ள மக்கள் வங்கி சேவையை பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கின்றன. இது டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த சிக்கலை தீர்க்க, ரேஷன் கடைகளில் மினி ஏடிஎம்களை செயல்படுத்த மத்திய அரசு முன்முயற்சி எடுத்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னரே இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், மின்னணு பாயின்ட்-ஆஃப்-சேல் இயந்திரங்களை, கோர் பேங்கிங் தளங்களுடன் இணைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இதை நடைமுறைப்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. இப்போது இணைப்பு சிக்கல் தீர்க்கப்பட்டிருப்பதால், மினி ஏடிஎம்களை நிறுவும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த ஏடிஎம்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் கூடிய டிஜிட்டல் கருவிகளை கொண்டிருப்பதால், கோர் பேங்கிங் சேவைகளை வழங்கும் திறன் கொண்டது. மட்டுமல்லாது ஏடிஎம்கள் அமைந்துள்ள பகுதியில் வங்கியின் ஊழியர் ஒருவர் உதவியாளராக அமர்த்தப்பட்டிருப்பார்.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்திற்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் கூறுகையில், "முதியோர் உதவி தொகையை பெறும் மூத்த குடிமக்கள், வங்கிகளுக்கு சென்று தங்களுக்கான பணத்தை எடுப்பதில் பெரிதும் சிரமமடைகின்றனர். நீண்ட நேர காத்திருப்பு, நீண்ட தூர பயணம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் மினி ஏடிஎம் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஏடிஎம்களை அமைக்க வாய்ப்புள்ள ரேஷன் கடைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகள் முடியும்பட்சத்தில், விரைவில் ரேஷன் கடைகளில் ஏடிஎம்கள் தொடங்கப்படும். தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், மலைவாழ் கிராம மக்களுக்கும் இந்த ஏடிஎம்கள் பயன்படும். இதன் மூலம் ரூ.1000-2000 வரை பணம் பரிமாற்றம் செய்ய முடியும்.
ஏற்கெனவே மூத்த குடிமக்களின் வசதிக்காக அஞ்சல் அலுவலகங்களிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மினி ஏடிஎம்கள் நிறுவப்பட்டிருக்கின்றன" என்று கூறியுள்ளார்.
பேரிடர் காலங்களில் நிவாரண தொகையும், பொங்கல் சமயத்தில் பொங்கல் பரிசு தொகையும் ரேஷன் கடைகள் வாயிலாக விநியோகிக்கப்பட்டிருக்கின்றன.
இப்போது புதியதாக ரேஷன் கடைகளில் ஏடிஎம்களை கொண்டுவருதன் மூலம், வங்கி பணப்பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அரசு போடும் பணத்தை, மினிமம் பேலன்ஸ் இல்லை என்று வங்கிகள் பிடிக்காமல் இருந்தால் சரி என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications