வீடு, கடைகளுக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு..ஒரே வழிகாட்டி மதிப்பீட்டில் குழப்பம்? வருதா மாற்றம்?
சென்னை : குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்ட நிலையில், சில குழப்பங்கள் உள்ளதால், அதுகுறித்து விரைவில் சுமூக முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில், குறைந்தபட்ச குடியிருப்பு மதிப்பை நிர்ணயம் செய்யப்பட்டது. சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியில் சதுரஅடி ரூ.1000, ஆவடி, தாம்பரம், ஓசூர், காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.800ம் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவில் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.700, திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர், கரூர் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.600, தூத்துக்குடி, தஞ்சாவூர், சிவகாசி, கும்பகோணம் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.500, கடலூர் மாநகராட்சியில் சதுரஅடி ரூ.400 என நிர்ணயிக்கப்பட்டது.
நகராட்சிகள்: மேலும், நகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள மனைகளுக்கு சதுரஅடி ரூ.300, அனைத்து பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு சதுரஅடி ரூ.200 என்று நி்ர்ணயிக்கப்பட்டது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் மற்றும் இம்மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு குடியிருப்புகளுக்கு சதுரஅடி ரூ.100-ம், விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.5 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
பேரூராட்சிகள்: அதேபோல், இதர மாவட்டங்களில் உள்ள கிராமங்கள், இம்மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு குடியிருப்புகளுக்கு சதுரஅடி ரூ.50, விவசாய நிலங்களுக்கு ஏக்கர் ரூ.2 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டது.
பதிவுக்கட்டணம்: இந்த அறிவிப்பானது கடும் அதிர்ச்சியை பொதுமக்கள் தரப்பில் ஏற்படுத்தியது.. ஏற்கெனவே, பதிவுக்கட்டணம் உயர்ந்துள்ளது.. பிறகு, அடுக்குமாடி கட்டிடம் வாங்குவோருக்கான பதிவு விதிகளில் திருத்தம் செய்து, 9 சதவீதம் முத்திரைத் தீர்வை, பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று அடுத்த அறிவிப்பு வெளியானது.
இப்போது, குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பும் நிர்ணயித்துள்ளதால், மனைகளின் சந்தை மதிப்பு உயருவதுடன், நிலம் மற்றும் குடியிருப்புகளின் விலையும் உயரும் என்ற அச்சம் பொதுமக்களிடம் படர்ந்து வருகிறது.
குடியிருப்புகள்: குடியிருப்புகளுக்கான குறைந்தபட்ச மதிப்பு, உள்ளாட்சி நிலை அடிப்படையில், சதுர அடிக்கு, 50 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரையும், விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு ஏக்கருக்கு 2 லட்சம், 5 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் சில குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சார் - பதிவாளர்கள் சொல்லும்போது, "குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை உயர்த்திய நடவடிக்கையில், சில குறைபாடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும், குடியிருப்பு, வணிகம், விவசாயம், தொழில் என பயன்பாடு அடிப்படையில், நிலங்கள் வகைபடுத்தப்பட்டுள்ளன..
விரைவில் நடவடிக்கை: இதில், குடியிருப்பு நிலத்துக்கான குறைந்தபட்ச மதிப்பு உயர்ந்த பகுதியில், வணிக பகுதி நிலங்களுக்கான மதிப்பு வேறாக உள்ளது.. இது பத்திரப்பதிவின்போதும், தணிக்கையின் போதும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
அதனால், வகைப்பாடுகள் நிலையில் வேறுபாடுகள் அதிகரித்து உள்ளதால், பத்திரப்பதிவுகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், இந்த வேறுபாடுகளை சீரமைக்க, பதிவுத்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை விரைவில் எடுப்பார்கள் என காத்திருக்கிறோம்" என்றும் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications