வேலைன்னு வந்துட்டா.. மதியம் 2.40 டூ இரவு 12.20! 9 மணி நேரமாக ஒரே இடத்தில் அன்பில் மகேஷ்
சென்னை: 9 மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை, குறைகளை, புகார்களை பொறுமையுடன் கேட்டறிந்திருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
தமிழக அமைச்சரவையில் இதுவரை இவரை போல் 9 மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து வேறு எந்த அமைச்சரும் ஆய்வு செய்ததும் இல்லை, துறை ரீதியான பணிகளை கவனித்ததும் இல்லை.
அதிகபட்சம் 3 மணி நேரம் வரை அமைச்சர்கள் அலுவல் பணிகளை கவனிப்பார்கள். பிறகு ஓய்வு, கட்சிப்பணி, நிர்வாகிகளுடன் சந்திப்பு என சென்றுவிடுவார்கள்.

ஆனால் அமைச்சர் அன்பில் மகேஷ் மட்டுமே 9 மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து தன்னை சந்திக்க வந்த ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஓட்டுநர் சங்கப் பிரதிநிதிகள் என 80க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்தோரை சந்தித்து பேசியிருக்கிறார்.
வெறுமனே பேருக்கு சந்திக்காமல் அனைத்து சங்கத்தினருக்கும் உரிய நேரம் கொடுக்கப்பட்டு, அவர்கள் கூறிய கருத்துக்களை உள்வாங்கி, தெரிவித்த குறைகள், கோரிக்கைகளை குறிப்பெடுத்துக் கொண்டார் அமைச்சர் அன்பில் மகேஷ். மீட்டிங் இதோ முடிந்துவிடும், அதோ முடிந்துவிடும் என நினைத்த அதிகாரிகள் பலரும் அமைச்சரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியிருக்கின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலினுடன் கலந்துபேசி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் முன் வைத்த கோரிக்கைகள் மீது தீர்வு காண்பதற்கான நடவடிக்கையை தொடங்கவுள்ளார். ஒரு வேலையை தள்ளிப்போட்டு ஆசிரியர்களை அலைக்கழிக்க கூடாது என்பதற்காகவே தனக்கிருந்த கட்சிப் பணிகள், விசிட்டர்ஸ் சந்திப்பு என எல்லாவற்றையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு 9 மணி நேரத்தை கடந்தும் இந்த சந்திப்பை அவர் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications