பள்ளி பாத்ரூம்கள்.. ரொம்ப சங்கடத்தில் இருக்கேன்.. அன்பில் மகேஷ் வருத்தம்
பள்ளி விபத்து குறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி தந்துள்ளார்
சென்னை: தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்..
நேற்று காலை 10.50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி டி. விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர். சுதீஷ் ஆகிய 3 மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்
தமிழகமெங்கும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. பல அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சரியில்லை என்று பொதுமக்கள் கொந்தளித்து உள்ளனர்.. சம்பந்தப்பட்ட பள்ளியிலேயே மாணவர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டமும் செய்தனர்.. பள்ளி மாணவர்களிடம் போலீஸ்காரர்கள் சமரசம் பேசும் நிலைமையும் நேற்றைய தினம் ஏற்பட்டது.

குடும்பத்தினர்
விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாலும், விபத்து எதனால் ஏற்பட்டது என்பதுதான் பெருத்த கேள்வியாக எழுந்தது.. விபத்து நடந்த பள்ளிக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை நிரந்தர அங்கீகாரம் வழங்கி உள்ளதாகவும், இன்னும் சொல்ல போனால் நிரந்தர அங்கீகாரம் வழங்கி உள்ளதாகவும், இதனால் மாவட்ட முதன்மை கல்விதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமாரும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி இருந்தார்..

கலெக்டர் விஷ்ணு
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், இடிந்து விழுந்த சுவரில் பவுண்டேஷன் இல்லை, அதனால் தான் விபத்து நிகழ்ந்துள்ளது என்று கூறியிருந்தார்.. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் விஷ்ணு, கட்டிடம் இடிந்து விழுந்த விபத்திற்கு சுற்றுச்சுவர் அடித்தளம் அமைக்காமல் கட்டப்பட்டுள்ளது தான் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

சங்கடம்
இந்த சூழலில், இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, "மிகவும் சங்கடத்துடன் இருக்கிறேன்... மாணவர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது... பாத்ரூமை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.. அதனால்தான் நான் பள்ளிக்கு செல்லும்போது கழிவறையை தான் முதலில் பார்ப்பேன்... பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள், பொதுப்பணி துறை, வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்க பட உள்ளது...

அறிக்கை
கழிவறை, மின்சார பிளக் போன்றவை பள்ளியில் எவ்வாறு உள்ளது என்பதை நேரில் பார்வையிட உத்தரவிட்டுள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இடம் இல்லாத பட்சத்தில் வாடகைக்கு இடம் தேர்வு செய்ய வலியுறுத்தியுள்ளோம். நெல்லை பள்ளி நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications