தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு ரத்தாகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த முக்கிய விளக்கம்
சென்னை: 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே +1 வகுப்பிற்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தனியார்ப் பள்ளிகளில் +1 பாடங்களை நடத்தாமல் நேரடியாக +2 பாடங்களை நடத்துவதாகப் புகார் எழுந்த நிலையில் +1 பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், 10, +1, +2 எனத் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுத வேண்டிய உள்ளதால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகப் புகார்கள் எழுந்தன.

அன்பில் மகேஷ்
இந்தச் சூழலில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுடன் அன்பில் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆசிரியர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க ஆசிரியர்களின் மனசு என்று தனியாக ஒரு பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

ஆசிரியர்கள்
இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது என்பதை நாங்கள் மறக்கவில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குறுதி அளிக்கும் கட்சி திமுக இல்லை. உங்கள் எல்லா கோரிக்கைகளும் பரிசீலனை செய்து விரைவில் நிறைவேற்றப்படும். ஆசிரியர்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கத் தனியாக இரண்டு ஜிமெயில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம்" என்றார்.

கள்ளக்குறிச்சி சம்பவம்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், "கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையில் பல மாணவ மாணவிகளின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை விரைவில் வழங்குவது தொடர்பாக ஆட்சியரிடம் பேசி வருகிறோம். இதற்காகச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படும்.

+1 பொதுத்தேர்வு
+1 பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது. நேரடியாக +2 பொதுத்தேர்வை எழுதினால் மாணவர்கள் பல்வேறு சிக்கலைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதாலேயே பள்ளிக்கல்வித் துறை சார்பில் +1 பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. எனவே, இதை ரத்து செய்யும் திட்டம் எதுவும் தமிழக அரசுக்கு இல்லை. இது பொய்யான ஒரு தகவல்.

ஒரே நாடு ஒரே தேர்வு
அனைத்துமே ஒரே நாடு என்று கொண்டு வர மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படிதான் தற்போது ஒரே நாடு ஒரே தேர்வு முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு இது தொடர்பாகச் சந்திக்கவில்லை. கடந்த காலங்களில் அறிவொளி இயக்கம் எப்படிச் சிறப்பாகச் செயல்பட்டதோ, அதேபோல இல்லம் தேடி கல்வித் திட்டத்தையும் தமிழக அரசு சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் இந்தியாவிற்கே தமிழக அரசு தான் முன்னோடி மாநிலமாக உள்ளது.
Recommended Video

தற்கொலை சம்பவம்
மாணவ மாணவிகளின் தற்கொலை சமீப காலமாக அதிகரித்து வருவது கவலை தருகிறது. முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை தான் மாணவர்களுக்கு கவுன்சில் கொடுக்க மருத்துவர்கள் மாணவர்களைச் சந்திப்பார்கள். இதனை இப்போது மூன்று மாதத்திற்கு ஒரு முறை என மாற்றியுள்ளோம். இதற்காக 800 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications