தூத்துக்குடியில் பயிற்சி பல் மருத்துவர் கடத்தி தாக்குதல்.. அமைச்சர் அனிதாவின் ஆதரவாளர் கைது
சென்னை: தூத்துக்குடியில் பயிற்சி பல் மருத்துவரை கடத்தி தாக்கியதாக ஓட்டப்பிடாரம் ஒன்றிய திமுக செயலாளரும், ஊராட்சி மன்றத் தலைவருமான இளையராஜாவை போலீஸார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த பத்மநாபன் மகன் முருகப்பெருமாள் (25). இவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 18 ஆம் தேதி பணியை முடித்து விட்டு மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றபோது ஒரு காரில் 3 பேர் அவரை கடத்திச் சென்றனராம்.
ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். சித்திரவதை செய்ததோடு அவரிடமிருந்த 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் மணி பர்சை பறித்துக் கொண்டு மீண்டும் காரில் ஏற்றி அதே அரசு மருத்துவமனை வளாகத்தில் கொண்டு விட்டு சென்றனர்.

தூத்துக்குடி
அப்போது அவர்கள், "ஒரு மணி நேரத்தில் நீ தூத்துக்குடியை விட்டு ஓடிவிட வேண்டும். இங்கு நடந்ததை யாரிடமாவது சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தையும் கூண்டோடு அழித்துவிடுவோம்" என்று மிரட்டிவிட்டு அதே காரில் சென்றுவிட்டனராம். அதனைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவர் முருகப்பெருமாள் உயிருக்குப் பயந்து காயத்துடன் மதுரையில் உள்ள அவரது உடன் படித்த நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று நடந்த விபரத்தை அங்கு கூறியிருக்கிறார்.

தூத்துக்குடியில் சிகிச்சை
அதன் பிறகு தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடிக்கு வந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பயிற்சி மருத்துவர் கடத்தி, தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், மருத்துவர் முருகப்பெருமாளை கடத்திச் சென்று தாக்கியது, ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத் தலைவரும், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலருமான இளையராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

பயிற்சி மருத்துவர்
இதையெடுத்து, தென்பாகம் போலீஸார் இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயிற்சி மருத்துவர் முருகப்பெருமாள் தன்னுடன் பயிலும் மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகி வருவதாகவும், அது அப்பெண்ணின் தந்தைக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் அவர்களின் குடும்ப நண்பரான இளையராஜாவிடம் இது குறித்து தெரிவித்ததின் அடிப்படையில் அவர், பயிற்சி மருத்துவரை கடத்தி மிரட்டியுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆதரவாளர்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்தான் இந்த இளையராஜா. ஏற்கனவே அதே அமைச்சரின் ஆதரவாளர் பில்லாஜெகன், விருந்தினர் மாளிகையில் தகராறு செய்த விவகாரத்தில் சிறையில் இருக்கிறார். தற்போது அதே அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் சிக்கலில் சிக்கியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications