வெளிநாட்டு லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை! அதிரடி காட்டும் அமைச்சர் சி.வெ.கணேசன்! என்ன பின்னணி?
தீப்பெட்டி தொழிலை காக்கும் பொருட்டு அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை.
சென்னை: சட்டவிரோதமான வெளிநாட்டு லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவித்துள்ளார்.
தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அவர் இந்த நடவடிக்கையை தொடங்கியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கணேசன் கூறியதாவது;

தீப்பெட்டி தொழில்
தமிழ்நாட்டிலேயே விருதுநகர் மாவட்டத்தில் தான் அதிகளவில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிற்சாலைகளில் பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியத்தில் பிப்ரவரி மாதம் வரை 61,141 தொழிலாளர்கள் பதிவு பெற்றுள்ளனர்.

வெளிநாட்டு சிகரெட் லைட்டர்
சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்கள் மீது பொட்டலப் பொருள்கள் விதிகளின் கீழ் சிறப்பு குழுக்கள் அமைத்து பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.

தொழிலாளர் நலவாரியம்
முன்னதாக நடைபெற்ற தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூட்டத்தில், தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியத்திற்கு விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கங்கள் தங்கள் பங்களிப்பாக வழங்கப்பட்ட ரூ.5 கோடியை கொண்டு நிரந்தர ஆதார நிதி உருவாக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

வாரியத்தில் பதிவு
மேலும் இவ்வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ.1,000/- வழங்கும் புதிய கல்வி நல உதவி திட்டம் ஏற்படுத்தியதற்கும், இவ்வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் இயற்கை மரணம் அடையும் நேர்வில் அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட நல உதவித் தொகையை ரூ.20,000/-லிருந்து ரூ.30,000/-மாக உயர்த்தியதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications