உன் ஜம்பத்தை வேறு எங்காவது காட்டு...அதிமுகவிடம் காட்டாதே... சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு
சென்னை: திமுகவை பற்றியும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றியும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசிய நிலையில், அது ஸ்டாலினை கொதிப்படைய செய்துள்ளதாம்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்தமிழ்ச்செல்வனை நிர்வாகிகள் மத்தியில் அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் திமுக தலைமை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஹை டெசிபலில் அவர் முழங்கியதை கேட்டு மேடையில் இருந்த அமைச்சர் எம்.சி.சம்பத்தே வியர்த்து விறுவிறுத்து போனாராம்.
அந்தளவுக்கு கடுமையான வார்த்தைகளை உமிழ்ந்துள்ளார் சி.வி.சண்முகம். மு.க.ஸ்டாலினின் உருட்டல், மிரட்டல்களுகெல்லாம் அஞ்சியவன் தாம் இல்லை என்றும், நீ என்ன உத்தமர் காந்தியா எனவும் வினவியுள்ளார். மேலும், இனி கனவில் கூட ஸ்டாலினால் முதலமைச்சர் ஆக முடியாது என்றும், இன்னும் நூறு கருணாநிதி பிறந்தால் கூட செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு திமுக செல்ல முடியாது எனவும் பேசியுள்ளார்.
இந்தியா, ஜப்பான், கனடாவில் ஸ்தம்பித்து மீண்டு வந்த டுவிட்டர், ட்வீட் டெக்!
மு.க.ஸ்டாலின் தனது ஜம்பத்தை வேறு எங்காவது காட்ட வேண்டும் என்றும், அதை அதிமுகவிடம் காட்டக்கூடாது எனவும் சி.வி.சண்முகம் தெரிவித்தார். விக்கிரவாண்டியில் குற்றவியல் நீதிமன்றத்தை தாம் கொண்டுவந்தால் திமுகவுக்கு என்ன வந்தது எனக் கேள்வி எழுப்பிய அவர், திமுகவுக்கு மட்டும் தான் வழக்கறிஞர்கள் இருக்கிறார்களா, ஏன் எங்களிடம் இல்லையா என ஆவேசமடைந்தார். உன்னை விட பத்தடி மேல பாய்பவன் நான் எனப் பேசிய சி.வி.சண்முகம், நீ மட்டும் தான் வழக்கு போடுவியா என ஸ்டாலினை விமர்சித்தார்.
திமுகவினர் முதுகில் ஆயிரம் அழுக்கை சுமந்துக்கொண்டு எங்களை குறை கூறுவதா, உங்கள் கதை எனக்குத்தெரியாதா, நோண்டத்தொடங்கினால் தாங்கமாட்டீர்கள் என எச்சரிக்கை விடுத்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் ஸ்டாலின் அளித்த பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற்றம் அடைந்துவிட்டனர் என்றும், இப்போது தெளிவாக உள்ளதால் திமுகவின் பிரச்சாரம் எடுபடாது என்றும் தெரிவித்தார்.
இந்தப் பேச்சு பொன்முடி மூலம் அப்படியே திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்துக்கு சென்றதை அடுத்து கொதித்துப் போன அவர், தனது பிரச்சாரத்தின் போது அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கடுமையான பதிலடி தரவுள்ளாராம்.