தமிழக மின்சாரத் துறையில் 2.5 லட்சம் கோடி கடன் இருக்கு.. திமுக அரசில் பல விதிமீறல்கள்! அமைச்சர் நிர்மல் குமார்
சென்னை: தமிழக மின்சாரத் துறையில் கிட்டத்தட்ட 2.5 லட்சம் கோடி கடன் உள்ளது என மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியுள்ளார். மேலும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மின்சார வாரியத்தில் பல்வேறு முறைகேடுகள், விதிமீறல்கள் நடந்துள்ளது என்றும் ஊழியர்கள் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளதாகவும் கூறியுள்ளார். மாதம் ஒரு முறை மின் கணக்கீடு முறை அமலுக்கு வருமா? என்பது குறித்தும் நிர்மல் குமார் பதில் அளித்துள்ளார்.
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுக அரசில் பல விதிமீறல்கள் நடந்து இருக்கு
முதல் கட்டமாக ஆய்வுகள் நடத்தி உள்ளோம். என்னென்ன இருக்கிறது, என்ன மாதிரி பாலோ பண்றாங்க.. என முதல் கட்ட ஆய்வு தான் நடத்தி இருக்கோம். மின்சார வாரியம் என்ன நிலையில் இருக்கு.. எவ்வளவு கடன் இருக்கிறது என ஆலோசனை நடத்தினோம். வரும் காலங்களில் மின்சார வாரியத்தினை லாபகரமானதாக மாற்ற உண்டான அனைத்து முயற்சியையும் செய்ய உள்ளோம்.
இதற்கு முன்பு இருந்த திமுக அரசில் பல இடங்களில் முறைகேடுகள் நடந்து உள்ளன. பல விதிமீறல்கள் நடந்து இருக்கு. இதில் பல சிபிஐ ஹேண்ட் ஓவர் செய்திருக்கு. நடந்த தவறுகள் அனைத்தையும் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் மின்சாரத் துறையில் எல்லாவற்றையும் சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
மாதம் ஒருமுறை மின் கட்டணம் முறை
முதல்வர் உத்தரவின் பேரில், முழுவதுமாக மின்சாரத் துறையை சீரமைத்து, புது புத்துணர்சி கொடுப்பதற்கான வேலைகளில் ஈடுபட இருக்கிறோம். மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்படுமா என்றால், இப்போது இங்கு அதிகம் ஊழியர் பற்றாக்குறை என்பது இருக்கிறது. இத்தனை வருஷமாக செலவீனங்கள் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. ஊழியர்களை அதிகரிக்கும் வகையிலான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த 15 வருஷத்திற்கு முன்பு எவ்வளவு ஊழியர்கள் இருந்தார்களோ அவ்வளவு பேர் தான், அதைவிட கம்மியாகத் தான் இப்போது இருக்கின்றனர். மாதம் ஒருமுறை என்றால் ஊழியர்கள் வீடுகள் தோறும் சென்று கணக்கெடுக்க வேண்டியிருக்கும். எனவே ஊழியர்கள் பற்றாக்குறையை சரி செய்த பிறகு ஆலோசித்து மாதம் ஒருமுறை மின் கட்டணம் முறையை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்களுக்கு நியாயமான அனைத்தையும் செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்.
2.5 லட்சம் கோடி கடன் இருக்கிறது
மின்சாரத் துறையில் கிட்டத்தட்ட 2.5 லட்சம் கோடி கடன் இருக்கிறது. முழுமையாக இந்த மின்சார வாரியத்தை சீரமைத்து முற்றிலும் லாபகர நிறுவனமாக மாற்றி மக்கள் பயனடையும் அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. இதற்கு முன்பு இருந்த நிர்வாகம் செய்த விதிமீறல்கள், முறைகேடுகளால் தான் இந்த நிறுவனம் தேய்ந்துகொண்டு வருகிறது.
நாங்கள் புத்துணர்ச்சி கொடுக்க உள்ளோம். இருக்கிற லஞ்சம், ஊழல்கள், கையாடல்களை தவிர்த்தாலே எல்லாவற்றையும் மாற்ற முடியும். அதற்கான வேலைகளில் தான் செயல்பட்டு வருகிறோம்.. எனவே மாதம் ஒரு முறை மின் கணக்கீடு விரைவில் வரும். 200 யூனிட் இலவச மின்சாரம் முதல்வர் விஜய் கையெழுத்திட்டதில் இருந்தே, 10 ஆம் தேதியே அமல்படுத்தப்பட்டது. வரும் மாதம் முதல் அமலுக்கு வரும். என்று கூறினார்.














Click it and Unblock the Notifications