வேலைக்காரர்களாக வந்த தினகரன் குடும்பம்... ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சனம்
சென்னை: வேலைக்காரர்களாக வந்த தினகரன் குடும்பத்தினர் என அமைச்சர் சி வி சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம் சில கருத்துகளை முன் வைத்தார். அதில் சுகாதார துறை செயலாளர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை கொடுக்காதது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன், முதல்வர் எடப்பாடியை சந்தித்து முறையிட்டார்.
எதிர்ப்பு
பின்னர் அமைச்சர் சண்முகத்தை கட்டுப்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர்கள் குறித்து முதல்வரிடம் முறையிடுவதாகவும் கூறப்பட்டது. இதற்கு சி வி சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தீர்மானம்
இதுகுறித்து அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தில் அமைச்சர் சண்முகத்தை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றியது சரியா?
முதல்வரிடம் முறையீடு
அமைச்சர்களை மிரட்டும் வகையில் ஐஏஎஸ் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். ஜெ, மரணத்துக்கு பதில் சொல்ல முடியாத ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர்களை மிரட்டும் வகையில் முதல்வரிடம் முறையிடுவதாக கூறுகின்றனர். எங்களுக்கு யாரையும் கேள்வி கேட்க உரிமை உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் இன்னும் சந்தேகம் தீரவில்லை.
தாங்க மாட்டார்
வேலைக்காரர்களாக வந்த தினகரன் குடும்பம் ஜெயலலிதாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஜெ மரணத்துக்கு டிடிவி குடும்பம்தான் காரணம். நாங்கள் பதிலடி கொடுத்தால் தினகரன் தாங்க மாட்டார் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.