நேற்று ஜெ. மரணம் பற்றி திக் புகார்.. இன்று அதிகாலையே டெல்லி பயணம்.. பரபரக்கும் சிவி சண்முகம்!
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று திடீரென டெல்லிக்கு சென்றுள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று திடீரென டெல்லிக்கு சென்றுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து வருகிறது. இந்த ஆணையத்தின் புகார்கள் காரணமாக தற்போது தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ மீதும் சுகாதாரத்துறை செயலாளர்கள் மீதும், தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இதை அதிமுகவினரே எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பி வருகிறார்கள். இவரின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
என்ன சொன்னார்
சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தனது பேட்டியில், ஜெயலலிதாவிற்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்படவில்லை. அவருக்கு தவறான சிகிச்சை கொடுத்த மருத்துவர் யார்? அப்பல்லோ மருத்துவமனையை ஆட்டிப்படைத்தது யார்? இதற்கு பின்னணி யார் என்று நிறைய கேள்விகளை எழுப்பினார். மேலும் சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
டெல்லி சென்றார்
நேற்று இப்படி குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று திடீரென டெல்லிக்கு சென்றுள்ளார். இன்று காலையே கிளம்பி சென்னை விமானம் நிலையம் மூலம் அவர் டெல்லி சென்றார். டெல்லியில் அவர் இரண்டு நாட்கள் இருப்பார் என்று கூறப்படுகிறது. மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள்.
சில முக்கிய நபர்கள்
அதேபோல் இந்த பயணத்தில் சி.வி. சண்முகம் சில முக்கிய தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜகவை சேர்ந்த சில முக்கிய அமைச்சர்களை சி.வி. சண்முகம் சந்திப்பார் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த சந்திப்பிற்கான காரணம் என்ன என்று தெளிவாக தெரியவில்லை. என்ன ஆலோசனை செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை.
பரபரப்பு நிமிடங்கள்
ஜெயலலிதா மரண விசாரணையை டெல்லி மிகவும் தீவிரமாக கவனித்து வருகிறது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகங்களை எழுப்பிவிட்டுவிட்டு மறுநாளே சி.வி. சண்முகம் டெல்லி செல்வது பரபரப்பை உருவாக்கி இருக்கிறது. இதனால் இந்த சந்திப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.