அம்மாவை இழந்து தவிக்கும் அமைச்சர் தாமோ அன்பரசன்! துக்கத்திற்கு மத்தியிலும் தேர்தல் பணியில் கவனம்!
சென்னை: ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தாயார் ராஜாமாணி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
அவரது உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
கட்சியினர் பெருமளவில் திரண்டு அமைச்சரின் அம்மாவுக்கு இறுதி மரியாதை செய்து வருகின்றனர்.

அமைச்சர் தாயார்
ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தாயார் ராஜாமணி வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார். அவரக்கு வயது 83. இதையடுத்து அவரது உடல் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள அமைச்சரின் பூர்வீக வீட்டில் வைக்கப்பட்டு உறவினர்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அமைச்சரின் தாயார் மறைவு செய்தியறிந்து, உடனடியாக அவரது இல்லம் புறப்பட்டுச் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

நேரில் அஞ்சலி
அவரைத் தொடர்ந்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் அமைச்சர் தாமோ அன்பரசன் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். காஞ்சிபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகள் பிரச்சாரப் பணிகளை இன்று ஒதுக்கி வைத்துவிட்டு அமைச்சரின் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்டனர். அவர்களிடம் தேர்தல் பணிகளில் சுணக்கம் வேண்டாம் எனக் கூறி, துக்கத்திற்கு மத்தியிலும் கட்சியினரை பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்தார் அமைச்சர் அன்பரசன்.

அம்மா மீது பாசம்
அமைச்சர் தாமோ அன்பரசனுடன் உடன்பிறந்தவர்கள் 4 பேர். 3 சகோதரிகள், ஒரு தம்பி என இருந்தாலும் தனது தாயாரை அவரது இறுதிமூச்சு வரை உடன் வைத்துக் கவனித்துக்கொண்டவர் அமைச்சர் அன்பரசன் தான். அமைச்சர் பணி மற்றும் அரசியல் பணிக்கு இடையேயும் தனது அம்மாவை பார்த்து பார்த்துக் கவனித்துக் கொண்டவர் அன்பரசன். இதனிடையே அவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மற்ற அமைச்சர்கள் இரங்கலும், ஆறுதலும் கூறினர்.

மாவட்டச் செயலாளர்
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள அமைச்சர் அன்பரசன் கடந்த 2006-ம் ஆண்டு முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அமைச்சரானார். தினமும் வீட்டை விட்டு புறப்படுவதற்கு முன்னர் தனது தாயாரிடம் ஆசி பெறுவது அமைச்சர் அன்பரசனின் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications