வெள்ளத்துக்கு அணையே தாங்க மாட்டேங்குது.. தடுப்பணை தாங்குமா! சட்டசபையில் துரைமுருகன் பேச்சால் ஷாக்!
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கூடியிருக்கும் நிலையில், தனது தொகுதியில் துரிஞ்சலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்தார் கீழ்பென்னாத்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான பிச்சாண்டி. அதற்கு பதிலளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இந்த காலத்தில் வரும் மழையைப் பார்த்தால் அணையே தாங்க மாட்டேங்குது. தடுப்பணை எப்படி தாங்கும் என கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீர்வளத்துறை அமைச்சரே அணைகள் தரமற்று உள்ளதாக பேசியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடியது. கடந்த ஜூன் மாதம் பத்து நாட்கள் பேரவை கூட்டம் நடைபெற்ற நிலையில் அதற்கு பிறகாக பேரவை விதிகளின்படி ஆறு மாதங்களுக்குள் கூட்டம் நடத்த வேண்டும்.

இதை அடுத்து இன்றும் நாளையும் கூட்டம் நடைபெறும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதை அடுத்து இன்று கூட்டம் தொடங்கியது. தொடர்ந்து, மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீத்தாராம் எச்சூரி, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, முரசொலி நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை செயலாளரான பி.சங்கர் ஆகியோரின் மறைவுக்காக இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கிய நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். அவர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அப்போது பேசிய கீழ் பெண்ணாத்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி, தனது கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் துரிஞ்சலாறு ஓடுகிறது. அதில் ஏற்கனவே ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என கேட்ட நிலையில் அணை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அணை கட்டப்படவில்லை. அதனால் தற்போது பெய்த மழை காரணமாக துரிஞ்சலாறு கரையோரப் பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியிலே தடுப்பணை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என அறிய விரும்புகிறேன் என்றார்.
அதற்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு நிர்வாக துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன்,” ஆற்றில் வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கு தடுப்பணை கட்டினால் போதும் என்கிறார் சட்டமன்ற உறுப்பினர். இந்த காலத்தில் வரும் மழையைப் பார்த்தால் அணையே தாங்க மாட்டேங்குது. தடுப்பணை எப்படி தாங்கும். இருந்தாலும் அந்த ஊரின் நிலைமை எனக்குத் தெரியும். எனவே சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டியின் கோரிக்கையை இந்த அரசு சீரியஸாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.












Click it and Unblock the Notifications