வடமாநில வாக்காளர்கள்.. தமிழ்நாட்டில் அதை தடுக்க வேண்டும்.. கவலையை வெளிப்படுத்திய துரைமுருகன்!
வேலூர்: வடமாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் போது, அதன் தாக்கல் அரசியலில் மிகப்பெரியளவில் இருக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அதேபோல் சீமான், பிரேமலதா மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருப்பதற்கு பின்னணியில் எந்த அரசியல் காரணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பீகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் வாக்காளர்கள் தமிழக வாக்காளர்களாக சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் பேசத் தொடங்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் விசிக, தவாகா, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் திமுக என்ன செய்யப் போகிறது என்பதே பலரின் கேள்வியாக எழுந்துள்ளது. இந்த நிலையில் வேலூரில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
இதன்பின் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், எனக்குக் கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. அதனால் அதிகமாகப் பேச முடியவில்லை என்று கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகனிடம், சீமான், பிரேமலதா மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததன் பின்னணி என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு துரைமுருகன், முன்னணியும் இல்லை.. பின்னணியும் இல்லை.. முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை.. அதனால் அரசியல் பண்பாட்டுடன் வந்து பார்த்தார்கள். அவ்வளவு தான் என்று தெரிவித்தார். தொடர்ந்து பீகார் வாக்காளர்கள் விவகாரம் குறித்த கேள்விக்கு, பீகாரைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களின் சொந்த ஊரிலேயே வேலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால், இங்கு வந்திருக்க மாட்டார்கள்.
தற்போது இங்குப் பணி செய்து வருகிறார்கள். இப்போது இது மிகப்பெரிய பிரச்சனை.. ஏனென்றால் பீகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம், இல்லை என்று சொல்லி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டார்கள். அதுபோல் தமிழ்நாட்டில் செய்ய முடியாது. இதுவொரு கிரானிக்கள் பிரச்சனை. அதனால் தலைவர்கள் தான் அணுக வேண்டும். அதேபோல் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் போது நிச்சயம், அரசியலில் தாக்கம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications