OPS நல்ல மனுஷன் தான்; ஆனால் அவருக்கு விவரம் போதாது; முல்லை பெரியாறை வைத்து என்ன அரசியலோ -துரைமுருகன்
சென்னை: முல்லை பெரியாறு அணையிலிருந்து உச்சநீதிமன்ற ஆணைப்படியே நீர் திறக்கப்பட்டதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர், 'முல்லை பெரியாறு அணையை வைத்து என்ன அரசியலோ எனக்குத் தெரியவில்லை' என வேதனைத் தெரிவித்தார்.
ரூல் கர்வ் விதிப்படி முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை பராமரிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற ஆணை என்றும் இதனை அறிந்துகொள்ளாத பழமைவாதிகள் சிலர் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசை குறை கூறி ஒப்பாரி வைத்து வருவதாகவும் துரைமுருகன் சாடினார்.

முல்லை பெரியாறு
முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை திமுக அரசு விட்டுக்கொடுப்பதாக குற்றஞ்சாட்டி தேனியில் நேற்று பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் இன்று அதிமுக சார்பில் 5 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும், பேபி அணைக்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அதிகாரிகள் அனுமதியளித்த நிலையில், கேரள அரசு அந்த அனுமதியை திரும்பப்பெற்றுக் கொண்ட விவகாரமும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அரசியல் ஆதாயம்
இந்தச் சூழலில் முதலமைச்சருடன் காலை கலந்து ஆலோசித்துவிட்டு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை அரசு விட்டுக் கொடுக்கவில்லை என்றும் உச்சநீதிமன்ற ஆணைப்படியே எல்லாம் நடைபெறுகிறது எனவும் விளக்கம் அளித்தார். முல்லை பெரியாறு அணையை வைத்து ஓ.பி.எஸ். அரசியல் செய்வதாகவும், ஆய்வுக்கே செல்லாமல் 14 முறை முல்லை பெரியாறுக்கு சென்றிருப்பதாக அவர் கூறி வருவதாகவும் விமர்சித்தார்.

நல்ல மனுஷன்
ஓ.பி.எஸ்.ஸை பொறுத்தவரை நல்ல மனுஷன் தான், ஆனால் அவருக்கு விவரம் போதாது எனக் கூறி அமைச்சர் துரைமுருகன் கிண்டல் செய்தார். கேரளாவில் அமைச்சருக்கு தெரியாமல் அதிகாரிகள் எப்படி மரம் வெட்ட அனுமதியளித்து கடிதம் அனுப்பியிருக்க முடியும் என்றும் தனது அரசியல் வரலாற்றிலேயே, இப்படி ஒரு நிகழ்வை பார்த்ததில்லை எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். கேரள வனத்துறை அமைச்சர் சொல்வது விந்தையாக இருப்பதாக கூறினார்.

அமைச்சர் கேள்வி
இரு மாநிலங்களுக்கு இடையேயான சர்ச்சையான விவகாரத்தில் அதிகாரிகள் எப்படி இப்படி தன்னிச்சையாக நடந்து கொண்டிருக்க முடியும் என்றும் இதற்கு மேல் அந்த விவகாரத்திற்குள் தாம் செல்ல விரும்பவில்லை எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். கேரள வனத்துறை உயர் அதிகாரி அனுப்பிய அனுமதி கடிதத்தின் அடிப்படையிலேயே கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியதாகவும் ஆனால் அதைக் கூட அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என வேதனைத் தெரிவித்தார்.

ஸ்டாலின் ஆய்வு
இதனிடையே சென்னை மழை வெள்ளம் தொடர்பான செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இந்தியாவிலேயே வேறு எந்த மாநில முதலமைச்சரும் செய்யாத பணிகளை கடந்த 3 நாட்களாக ஸ்டாலின் செய்து வருவதாகவும் காலையிலிருந்து இரவு வரை நிவாரணப் பணிகளை அவர் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications