"அன்று நாங்கள் வாங்கிய அடி எங்களுக்குத்தான் தெரியும்.." சட்டசபையில் உணர்ச்சி பொங்க பேசிய துரைமுருகன்
சென்னை: "நாங்கள் அன்று வாங்கிய அடி எங்களுக்குத்தான் தெரியும்.." என்று கூறிய அமைச்சர் துரைமுருகன், திராவிட இயக்க வரலாற்றை ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சட்டசபையில் இன்று வலியுறுத்தினார்.
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 1987 ஆம் ஆண்டு ராமதாஸ் தலைமையில் ஒரு வார கால தொடர் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. வன்னியர் சங்கம் எனும் அமைப்பைத் தொடங்கி ராமதாஸ் தலைமையில் அந்த காலகட்டங்களில் பெரும் போராட்டம் நடந்தது.
அப்போது தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வந்தது.
பவர்கட், கொலை.. 'அந்த' பகீர் வாக்குமூலம்.. கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன் இன்று ஆஜராகவில்லை.. ஏன்?
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்
இந்த போராட்டத்தை ஒடுக்க, துணை ராணுவப் படை வரும் அளவுக்கு நிலைமை போனது. போராடியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு, குண்டாந்தடி தாக்குதல் உள்ளிட்ட பல வழிகளில் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர். இந்தத் தாக்குதலில் சமூக நீதிப் போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கொல்லப்பட்டனர். பார்ப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம், சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன், பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய 21 பேர் இந்த போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களாகும்.
மணி மண்டபம்
இந்த நிலையில்தான், இந்த 21 பேருக்கும் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் விதி எண் 110ன் கீழ், முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டார். அவர் தனது அறிவிப்பில், தமிழ்நாட்டின் சமூகநீதிக் கொள்கைக்கு இந்திய அரசியல் சட்ட அங்கீகாரம் கிடைக்க சமூகநீதியை அடைய, பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்குரிய இடஒதுக்கீட்டினை உறுதிப்படுத்தியதும், காலத்தின் தேவைக்கேற்ப அளவு மாற்றம் பெற்றுத் தந்ததும், கடந்த அரை நூற்றாண்டு கால வரலாற்றிலே இருக்கக்கூடிய சரித்திரச் சான்றாகும். அது யாராலும் மறைக்க முடியாத சாசனமாக அமைந்திருக்கிறது.
இட ஒதுக்கீடு வழங்கிய கருணாநிதி
சமூகநீதிக்கான தொடர்ச்சியான போராட்டங்களின் வரிசையில், 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் போராட்டத்தில், அன்றைய அரசின் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்கள் 21 பேர். சமூகநீதிப் போராளிகளான அவர்களுடைய உயிர்த் தியாகத்திற்கும், போராட்டத்திற்கும் நியாயம் வழங்கிடும் வகையில், 1989 ஆம் ஆண்டு அமைந்த கருணாநிதி தலைமையிலான அரசு, இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்துக் கொடுத்து, அவர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீட்டினை வழங்கி, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அது அவர்களுடைய முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்துத் தந்தது.
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு
சமூகநீதிக் கொள்கையின் தொடர்ச்சியாக, கருணாநிதி வழியில் செயல்படக்கூடிய நம்முடைய அரசு, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் வன்னிய சமுதாயத்தினருக்கான 10.5 விழுக்காடு தனி ஒதுக்கீட்டினை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியிருக்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயம் எதுவாக இருந்தாலும், அதன் உரிமைகள் காக்கப்பட வேண்டும்; மீட்கப்படவேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழக அரசினுடைய உயர்ந்த நோக்கமாகும். அத்தகைய தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூர்ந்து, 1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையினுடைய துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையிலே, ரூபாய் 4 கோடி மதிப்பீட்டிலே, விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது நான் அளித்த வாக்குறுதி இது. யார் மறந்திருந்தாலும், நிச்சயம் நான் மறக்கவில்லை; யாரையும் மறக்கமாட்டேன்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வாக்குறுதி
"நான் சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவன். மிகவும் பின்தங்கிய வகுப்பினர் பட்டியலில் என் வகுப்புக்கு ஓர் இடம் உண்டு. நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதால், பின்தங்கிய வகுப்பினர் நலனுக்காக என் உயிரையே பணயமாக வைத்துப் போராடுவேன்" என்று தமிழ்நாடு சட்டமன்றத்திலே அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி சொன்ன வாசகம் இது. அந்த உறுதிமொழியை நானும் ஏற்றுக் கொண்டுள்ளதன் அடையாளம்தான் இந்த அறிவிப்பு என்பதை நான் இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார். விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். அதிமுக வெற்றிக்கு பாமக பங்களிப்பு அதிகமாக இருந்தது. எனவே ஸ்டாலின் வழங்கிய வாக்குறுதியை மறந்திருப்பார் என்றுதான் பிற கட்சியினர் நினைத்திரு்நதனர். ஆனால், 21 போராளிகள் பெயரிலும் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.
துரைமுருகன் உரை
இதனிடையே, சட்டசபையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், இந்த அறிவிப்பை சுட்டிக் காட்டி நெகிழ்ச்சியாக பேசினார். அவரது பேச்சிலிருந்து: ஸ்டாலின் உள்ளத்தில் உள்ள கொள்கையின் வெளிப்பாடுதான் இந்த அறிவிப்பு. நாமெல்லாம் இன்று சபையில் உட்காந்திருந்திக்கோம், பட்டதாரிகளாக உள்ளோம் என்றால் வகுப்புவாரி பிரதிநித்துவம்தான் காரணம். நீதிக் கட்சியிலேயே ஆரம்பித்து 100 ஆண்டுகாலமாக சமூக நீதிக்காக நாம் போராடி வருகிறோம். இப்போதும் போராடி வருகிறோம். நெருப்பாற்றில் நீந்தி வந்துள்ளனர் நமது முன்னோர்கள். பல தியாகங்களை செய்துள்ளார்கள். ஆனால் வருங்கால சமூகம் எப்படி இருக்குமோ என்ற கவலை எனக்கு இருக்கிறது. என்னை பொறுத்தளவில் திராவிட இயக்க கொள்கை நெஞ்சில் ஊறிப்போன ஒன்று. வருமானம் இல்லாத குடும்பம் என்பதால், அந்த கஷ்டம், கொடுமை எல்லாம் எனக்கு தெரிந்தது. ஆனால் என் மகனுக்கு.. அதாவது எல்லோர் மகனுக்கும்.., இப்போது அது தெரியவில்லை. காரணம்.., வளர்ந்து விட்டோம், பெரிய சொசைட்டியாகிவிட்டோம். எம்எல்ஏவாகிவிட்டோம். ஐஏஎஸ் ஆபீசராகிவிட்டோம். நமது பிள்ளைகளை கான்வென்ட்ல விட்டுட்டோம். அவர்களிடம் போய் இதைச் சொன்னால், ஐ டோன்ட் நோ எனித்திங்.. என்று சொல்கிறான்.
வரலாறு தெரியாத சமுதாயம் அழிந்துவிடும்
என்ன காரணம்.. நாம் நமது பிள்ளைகளுக்கு வரலாறு சொல்லித் தரவில்லை. எந்த சமூகம் வரலாற்றை மறக்கிறதோ, அந்த சமுதாயம் நினைவிழந்த மனிதனுக்கு சமம் என்று வரலாற்று பேராசிரியர் அர்ணால்ட் டாயம்பி அழகாக குறிப்பிடுவார். எந்த சமுதாயம் தான் வந்த வழியை மறந்து போய் இருக்கிறதோ அந்த சமுதாயம் அழிந்து போயிருக்கிறது. உலக வரலாற்றை எடுத்து பார்த்தால் பல சமுதாயங்கள் அழிந்து போக அதுதான் காரணம்.
அன்றைக்கு வாங்கிய அடி
தந்தை பெரியாரும், அண்ணாவும் அதற்கு முன்பு வெள்ளுடைவேந்தர் காலத்தில் இருந்து சமூக நீதி வரலாறு உள்ளது. அதில் ஊறிப்போனவர் கருணாநிதி. தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அவர்களுக்கு ஊதியம் கொடுக்கிறார். ஆனால், அன்றைக்கு நாங்கள் வாங்கிய அடி எங்களுக்குத்தான் தெரியும். அன்றைக்கு எங்கள் முப்பெரும் விழா. அந்த விழாவிற்கு வந்து போனவர்களை எல்லாம் வழி மறித்து, மூன்று நாட்கள், நான்கு நாட்கள் அடித்தார்கள். படாதபாடு பட்டோம். கடைசியில் கருணாநிதி நடந்து போவது என முடிவெடுத்த பிறகுதான் அடி விழுவது நின்றது. ஆனால் அது பரவாயில்லை, அண்ணன் தம்பி பிரச்சினை. இனத்தை காக்க வேண்டும் என்று முடிவு செய்தார் கருணாநிதி.
கருணாநிதியின் மறு அவதாரம்
இப்போது கருணாநிதி மறு அவதாரம் எடுத்து வந்ததை போல ஸ்டாலின் உள்ளார். கொடுத்த வாக்குறுதியை ஸ்டாலின் நிறைவேற்றுகிறஆர். புகழ வேண்டும் என்பதற்காக இதை சொல்லவில்லை. நான் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்னும் 25 வருட காலம்.., நான் இருப்பேனோ இல்லையோ, தளபதி (ஸ்டாலின்) இருப்பார். திராவிட இயக்கத்தை காப்பீர்கள். ஒவ்வொருவரும் தன் வீட்டு பிள்ளைகளுக்கு தங்கள் வரலாற்றை சொல்ல வேண்டும். வெள்ளுடை வேந்தர் யார், ஜிஎம் நாயர் யார், முத்தையா முதலியார் யார் என்ற கதையெல்லாம் சொல்லனும். எந்தெந்த கதையெல்லாமோ சொல்றீங்க, இந்த கதையை சொல்ல மாட்டேங்கிறீர்கள். கதையை சொல்லாவிட்டால், சமூகம் அழிந்து, நாடற்றவனாக மொழியற்றவனாக இந்த சமுதாயம் போய்விடும். மொழி இருந்தால்தான் இனம் இருக்கும், இனம் இருந்தால்தான் நம் உணர்வு இருக்கும், வாழ்வு இருக்கும். அந்த வாழ்விற்கு ஒளிகாட்டியாக எங்கள் முதல்வர் கொள்கை வழிகாட்டியை வெளியிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.