இனிமேல் இப்படித் தான் நீங்க செய்யனும்! காரணம் சொல்லக்கூடாது! அதிகாரிகளை அலற வைத்த அமைச்சர் எ.வ.வேலு!
சென்னை: இனிமேல் கட்டப்படும் அரசு அலுவலக கட்டடங்களின் முகப்புதோற்றம் (Front Elevation) எழில்மிக்கதாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கறார் உத்தரவு பிறப்பித்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.
அதேபோல் யார் வந்தாலும் டெண்டர் கொடுக்காமல் ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும்போது, அவர்களுடைய திறனை ஆய்வு செய்ய வேண்டும் என அட்வைஸ் செய்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு;

திட்ட மதிப்பீடு
திட்டப்பணிகளுக்கு மதிப்பீடு தயார் செய்யும்போது, அனைத்துத் தேவைகளையும் உள்ளடக்கி மதிப்பீடு தயார் செய்ய வேண்டும் என்றும் நிலம் கையகப்படுத்த காலதாமதம் ஏற்பட்டால், உடனடியாக உயர் அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார். கல்வித்துறையின் கட்டடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, கட்டடங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்து இடித்துவிட்டு, புதிய கட்டடங்கள் கட்ட வேண்டுமென்றால், உரிய கருத்துரு அரசுக்கு அனுப்புமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

முகப்புத் தோற்றம்
இதனிடையே இனிமேல், புதிய கட்டடங்கள் கட்டும்போது, முகப்பு தோற்றம் (Front Elevation) எழில்மிக்கதாக இருக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் மத்தியில் மிக கறாராக கூறிவிட்டார் அமைச்சர் வேலு. இனிமேல் கட்டப்படும் ஒவ்வொரு அரசு அலுவலகங்களும், அண்மையில் முதல்வர் வெளியிட்ட முகப்பு தோற்றத்தின்படியே இருக்க வேண்டும் என்பதை கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டார்.

2 லட்சம் சதுர அடி
புதிய கட்டடம் கட்டும்போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைப்படம், 2 இலட்சம் சதுர அடிக்குமேல் இருந்தால், சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெற்றுதான், கட்டடங்கள் கட்ட வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
உதவி பொறியாளர்களும், செயற்பொறியாளர்களும் ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும்போது, அவர்களுடைய திறனை ஆய்வு செய்ய வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக அமைச்சர் எ.வ.வேலு கூறிவிட்டார்.

பொதுப்பணித்துறை
பொதுப்பணித்துறையால், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவத்துறை பணிகள் தொடர்பாக தனியாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் கூடுதல் கட்டடங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை பொது மக்களின் பயன்பாடு கருதி காலதாமதம் இல்லாமல் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.












Click it and Unblock the Notifications