வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு.. அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு.. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!
வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஐ.பெரியசாமி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அமைச்சரவையில் முக்கியமான துறைகளின் அமைச்சராகவும் இருந்தவர் ஐ.பெரியசாமி.
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். நகைக்கடன் ரத்து தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற முக்கியக் காரணமாக இருந்தார்.

ஐ.பெரியசாமி மீது வழக்கு
இவர் மீது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது.

அதிமுக ஆட்சியில் வழக்குப்பதிவு
இந்த புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012ஆம் ஆண்டு , அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

விதிமுறைகள் பின்பற்றப்பட்டன
அந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் வழக்கறிஞர்கள் ரகுநாதன் மற்றும் ஏ.சரவணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்களது வாதத்தில், விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதனால் வீட்டு வசதி வாரிய துறைக்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படவில்லை, சந்தை விலைக்குதான் விற்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

வழக்கில் இருந்து விடுவிப்பு
இதற்கு அமைச்சர் உடந்தையாக இருந்தார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரங்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டினர். மேலும் வழக்குத் தொடர்வதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்றும், புகாருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வாதிட்டனர். அத்துடன், அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயவேல், அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications