நெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்துவிட்டது.. வைகோ, திருமா தன்மானம் உள்ளவர்கள்.. வம்பிழுக்கும் அமைச்சர்
Recommended Video
சென்னை: நெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்துவிட்டது. வைகோ, திருமாவளவன் தன்மானம் உள்ளவர்கள் என அமைச்சர் ஜெயக்குமார் வம்புக்கு இழுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் மதிமுகவும் விடுதலைச் சிறுத்தைகளும் இல்லை என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருன் தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ராஜலட்சுமி கொலைக்கு திமுக சார்பில் எந்த கண்டனமும் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை என்று திருமாவளவனுக்கு வேதனை இருந்தது.
இதையடுத்து தாங்கள் திமுகவின் தோழமை கட்சிதான். கூட்டணி குறித்து இனிமேல்தான் முடிவு செய்யப்படும் என திருமாவளவன் தெரிவித்திருந்தார். கருணாநிதி மருத்துவமனையில் இருந்தது முதற்கொண்டு திமுகவுடன் உறவாடும் வைகோ, ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என கூறி வந்த நிலையில் அவரை கூட்டணியில் இல்லை என கூறியது துயரத்தில் ஆழ்த்தியது.
இதைத் தொடர்ந்து கூட்டணியில் மதிமுக உள்ளதா இல்லையா என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும் என வைகோ வலியுறுத்தினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவரை விடுவிக்கக் கோரி டிசம்பர் 3-ஆம் தேதி நடத்தப்படும் மதிமுக போராட்டத்துக்கு திமுக ஆதரவளிக்கும் என ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனால் வைகோ நிம்மதி அடைந்தார். இதையடுத்து திருமாவளவனும் ஸ்டாலினை சந்தித்து பேசினார். திமுக கூட்டணிக்குள் இத்தனை சலசலப்புகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் திமுக கூட்டணி என்ற நெல்லிக்காய் மூட்டை தற்போது அவிழ்ந்துள்ளதால் எல்லோரும் உருண்டு ஓடிவிடுவார்கள். வைகோவும் திருமாவளவனும் தன்மானம் உள்ளவர்கள்.
ரஜினி பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் எங்களுக்கு கவலையில்லை. கூட்டணி குறித்த தங்கள் நிலைப்பாட்டை தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.