தமிழ்மொழி குறித்த ட்வீட்டை முதல்வர் திடீரென நீக்கியது ஏன்.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
Recommended Video
சென்னை: தமிழ்மொழி குறித்த ட்வீட்டை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென நீக்கியது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை கொண்டு வருவதற்கான வரைவு திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. இந்த திட்டத்தின்படி 3-ஆவது மொழியாக இந்தியை தமிழக மாணவர்கள் கட்டாயம் படிப்பதாகும். இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து கட்டாய இந்தி என்பதற்கு பதிலாக விருப்பமொழியாக எந்த மொழியை படிப்பது என்பதை மாணவர்களே தேர்வு செய்யலாம் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ட்விட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அவர் ட்விட்டரில் கூறுகையில் பிற மாநிலங்களில் தமிழை 3-ஆவது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும்.
எடப்பாடி ட்வீட்
பிற மாநிலங்களில் விருப்ப மொழியாக தமிழை அறிவித்தால் தொன்மையான மொழிக்கு செய்யும் சேவையாகும் என எடப்பாடி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் மும்மொழி கொள்கையின்படி இந்தியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கிறாரா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.
கேள்வி
இதையடுத்து திடீரென முதல்வர் ட்வீட்டை நீக்கினார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் ட்வீட் நீக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
முற்றுப்புள்ளி
அப்போது அவர் கூறுகையில் தமிழ்மொழி பிற மாநிலங்களிலும் ஒலிக்க வேண்டும் என்பதால் முதல்வர் ட்வீட் செய்தார். ஆனால் முதல்வரின் ட்விட்டரில் கூறிய கருத்து அரசியலாக்கப்பட்டுள்ளது. இந்தி தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ட்வீட் நீக்கப்பட்டது.
பின்வாங்க மாட்டோம்
இந்தியை எந்த நிலையிலும் எந்த வடிவத்திலும், எந்த ரூபத்திலும் தமிழகம் ஏற்காது. இதுதான் அரசின் கொள்கை. தமிழகத்தில் இரு மொழிக்கொள்கைதான் பின்பற்றப்படும். இதிலிருந்து பின்வாங்க மாட்டோம்.
விளக்கம்
டெல்லி, ஆந்திரா , கர்நாடகம் போன்ற மாநிலங்களில் தமிழ் கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் இல்லை. பிற மாநிலங்களில் உள்ள குழந்தைகள் தமிழை விருப்ப பாடமாக படிக்க ஆர்வமாக இருப்பதாக அவரது பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால்தான் முதல்வர் அவ்வாறு ட்வீட் செய்திருந்தார் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.