இதுவரை ஏற்பட்ட பாதிப்பு என்ன? நஷ்டஈடு எப்போது கிடைக்கும்? அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் புது தகவல்..!
சென்னை: கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் 1,146 குடிசைகள் சேதமடைந்துள்ளதாகவும் 14 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாகவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், 157 கால்நடைகள் உயிரிழந்த தகவலையும் 149 மரங்கள் சாய்ந்து விழுந்த தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இதுவரை 237 வீடுகள் மழையால் சேதமடைந்திருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்

நஷ்ட ஈடு
சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மைத்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த தகவலை வெளியிட்டார். மேலும், ஓரிரு நாட்களில் மழைவெள்ளப் பாதிப்புகளால் ஏற்பட்ட சேத மதிப்பு முழுமையாக தெரியவரும் என்றும் அதன்பிறகு உரியவர்களுக்கு எவ்வித தாமதமும் இன்றி நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.

வெளியே வராதீர்
சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையை கடக்க இருப்பதால், பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொண்டார். குறிப்பாக காற்று 50 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் டூவிலர்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பயிர்சேதம்
பயிர்சேத விவரங்களை கணக்கெடுக்க மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதால் விவசாயிகள் கலக்கம் அடையத் தேவையில்லை என்ற நம்பிக்கையையும் அமைச்சர் அளித்திருக்கிறார். டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெற்பயிர்களும், வேறு பயிர்களும் சேதமடைந்திருக்கக் கூடும் என உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளதாக கூறினார்.

காற்று வீசும்
இதுவரை மழை மட்டுமே பெய்துகொண்டிருந்ததால் பெரிய பிரச்சனை இல்லை என்றும் இன்று காற்றும் சேர்ந்து வீசவுள்ளதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனிடையே இன்று காலை 5.30 மணிக்கெல்லாம் எழிலகம் அலுவலகத்திற்கு தாம் வந்துவிட்டதாகவும், இரவு நடந்த டெவலப்மெண்ட்களை அறிந்த பின்னர் தான் காலை தேநீரே குடித்ததாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications