நானும் இருக்கேன்னு காட்றதுக்கு அறிக்கை விடுறாரு ஓபிஎஸ்.. அமைச்சர் கே.என்.நேரு விளாசல்!
சென்னை : கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எந்த பணியும் மேற்கொள்ளாமல், தற்போது தன்னுடைய இருப்பை நிரூபிக்க, வடிகால் பணிகளை விரைந்து முடியுங்கள் என ஓபிஎஸ் அறிக்கை விட்டு வருகிறார் என அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வந்த கனமழையால், சென்னையின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மழைநீர் தேங்கிய இடங்களில் அதை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல்வருடன் மீட்டிங்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காணொளிக் காட்சி வாயிலான ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

பழைய இடங்களில் தேங்கவில்லை
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, "கடந்த வருடம் மழைநீர் தேங்கிய இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றதால், மழைநீர் இந்த ஆண்டு அதிகமாக தேங்கவில்லை. நேற்று இரவு முதல் சென்னை மாநகராட்சியின் சார்பில் 19,500 பேர் பணியில் உள்ளனர். மழைநீர் வடிகால் இல்லாத இடங்களில் தான் தற்போது மழைநீர் தேங்கி உள்ளது. மோட்டார்கள் கொண்டு அந்த பகுதிகளில் மழை நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

போர்க்கால அடிப்படையில்
மக்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

முதல்வர் ஆர்டர்
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தேங்கும் மழைநீரால் பாதிக்கப்பட்டால், கிட்டத்தட்ட 1 லட்சம் பேரை தங்க வைக்கும் அளவுக்கு முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. அவர்களுக்கு தேவையான நல்ல உணவு, குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.

தன் இருப்பை நிரூபிக்க
மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு வரும் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, "கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எந்த பணியும் மேற்கொள்ளாமல், தற்போது தனது இருப்பை நிரூபிக்க மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடியுங்கள் எனக் கூறுகிறார். ஏற்கனவே நடைபெற்று பணிகள் நிறைவடையும் நேரத்தில் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார்" என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications