கொளத்தூர் கன்னித்தீவா? நேரில் வந்து பாருங்கள்.. ஜெயக்குமாருக்கு அமைச்சர் கேஎன் நேரு கொடுத்த பதிலடி!
சென்னை: கொளத்தூரை கன்னித்தீவு என்று விமர்சித்த ஜெயக்குமாருக்கு திமுக அமைச்சர் கேஎன் நேரு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கி, வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக எழும்பூர் வேலப்பன் தெரு, மாண்டியத் சந்து, மன்னடி, தங்கசாலை தெரு, கொளத்தூர், பெரியார் நகர் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
ஆனால் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக தேங்கிய தண்ணீர், அடுத்த சில மணி நேரங்களிலேயே வடிந்தது. தென் சென்னை பகுதிகளில் மழை பாதிப்புகள் உடனடியாக சரிசெய்யப்பட்டாலும்,ம் வடசென்னையில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதனை மோட்டார்கள் வைத்து தமிழக அரசு அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வந்தது.

கேஎன் நேரு பேட்டி
இதனைத் தொடர்ந்து நேற்றிரவு முதல் சென்னையில் கனமழை பெய்து வந்தது. தொடர்ந்து மழைநீர் தேங்கிய இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் அமைச்சர் கேஎன் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நேற்று சென்னையில் பல இடங்களில் தேங்கி இருந்த மழைநீர் அகற்றப்பட்டுவிட்டது. இரவு மழை பெய்த போது, வடிகால் பணிகள் செய்யப்படாத பகுதிகள் தண்ணீர் தேங்கியது. அவற்றை மோட்டார் வைத்து வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

விரைவில் சாலைகள்
அதேபோல் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. மழைக் காலம் முடிவடைந்த பின், சென்னையின் சாலைகள் அனைத்தும் புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் மழைக்காலம் முடிந்த பின்னர் சாலைகள் செப்பனிடும் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தார்.

அதிமுக எந்த பணியும் செய்யவில்லை
தொடர்ந்து ஜெயக்குமார் விமர்சனம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, 10 ஆண்டு காலமாக அதிமுக பணி செய்திருந்தால், கடந்த ஆண்டு எப்படி மழை பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதிமுக ஆட்சியில் தூர்வாரும் பணிகள் கூட செய்யப்படவில்லை. அதனால் மட்டுமே கடந்த ஆண்டு பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் முக ஸ்டாலின், மழைநீர் வடிகால் பணிகள் அமைத்ததால் தான் மத்திய சென்னை, தென் சென்னையில் மழை பாதிப்பு ஏற்படவில்லை. வடசென்னையில் சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பு இருக்கிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கிறது. அதற்கு கால்வாய்கள் நிரம்பியது மற்றொரு காரணம்.

கன்னித்தீவு
அதிமுகவினர் செயல்பட்டிருந்தால், கடந்த ஆண்டு ஏன் தண்ணீர் நின்றது? ஜெயக்குமார் செல்லும் கன்னித்தீவு வேறு. நாங்கள் தினந்தோறும் கண்காணித்து வருகிறோம். எங்கும் தண்ணீர் நிற்கவில்லை. நேரில் வந்து பாருங்கள். அனைத்திலும் தோல்வியை சந்தித்துள்ளதால், அதிமுகவின் இருப்பை காட்டிக் கொள்வதற்காக ஜெயக்குமார் பேசுகிறார். அதிமுகவினர் எந்த பணிகளும் செய்யவில்லை. திமுக ஆட்சியில் பணிகள் செய்யப்பட்டதால், தண்ணீர் நிற்கவில்லை என்று தெரிவித்தார்.

ஜெயக்குமார் விமர்சனம்
முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக ஒன்றும் செய்யவில்லை. இரண்டு நாள் மழைக்கே திமுக திணறுகிறது. வாய்ச்சொல் வீரர்களாக, விளம்பர பிரியராக முதலமைச்சர் செயல்படுகிறார் . கன்னித்தீவாக கொளத்தூர் தொகுதி உள்ளது. கொளத்தூர் இல்லை, குளம் ஊர் ஆக தான் உள்ளது. சென்னையில் தண்ணீர் ஓரளவு வடிந்திருப்பதற்கு காரணமே அதிமுக எடுத்த நடவடிக்கை தான் என்று தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications