தமிழகத்தில் பண்டிகை காலத்தில் கொரோனா 3ஆம் அலை ஏற்படுமா? தெளிவாக விளக்கிய அமைச்சர் மா. சு
சென்னை: தமிழ்நாட்டில் முழுவீச்சில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழகத்தில் தான் கர்ப்பிணிகளுக்கு அதிகளவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்றும் இதனால் கொரோனா 3ஆம் அலை வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையம் கிராமத்தில் 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மெகா வேக்சின் முகாம்
இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த அமைச்சர், செல்லாண்டிபாளையம் கிராமத்தில் முதியவர்களுக்கு மருந்துகள் அடங்கிய பெட்டிகளையும் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன், "தமிழகத்தில் நடைபெற்ற 5ஆம் கட்ட சிறப்பு முகாமில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மகத்தான வெற்றி. இதுவரை மாநிலத்தில் 5.3 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வேக்சின் பணிகள்
மாநிலத்தில் 64% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல 22% பேருக்கு இரண்டு தவணை வேக்சின் போடப்பட்டுள்ளது. கரூரில் மிக அதிக அளவாக 8,53.600 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. இது இங்குள்ள மக்கள்தொகையில் 73% ஆகும். தமிழ்நாட்டில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து 2ஆம் இடத்தில் கரூர் உள்ளது. சிறிய மாவட்டமாக இருந்தாலும் அதிகளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் 1,20,960 டோஸ்கள் கையிருப்பு உள்ளது. பரிசளிப்பு போன்ற திட்டங்களால் அதிகளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருற்றுவம் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள்.

3ஆம் அலை
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் தங்கி இருந்த 150 நாடோடிகளுக்குப் தடுப்பூசி போட்டோம். அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்பெறும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கும் இதற்கு நல்ல முறையில் வரவேற்பைக் கொடுத்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் 3ஆம் அலை ஏற்பட எல்லாம் வாய்ப்பே இல்லை. அப்படி எதாவது நடந்தால் பொதுமக்களிடம் வெளிப்படையாகக் கூறுவோம்.

கொரோனா பாசிட்டிவ் விகிதம்
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1 சதவீதமாக உள்ளது. இன்று மாநிலத்தில் 1325 பேருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 1 சதவீதற்கு கீழ் ஆகும். ஒருவர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டால் கொரோனாவில் இருந்து 70% பாதுகாப்பாக இருந்து கொள்ளலாம். 2ஆவது டோஸ் எடுத்துக் கொண்டால், பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும். நாம் இப்போது அந்த நிலையை நோக்கித் தான் சென்று கொண்டிருக்கிறோம்" என்றார்.

குழந்தை கடத்தல்
தஞ்சையில் நடைபெற்ற குழந்தை கடத்தல் குறித்துப் பேசிய அமைச்சர் மா. சுப்பிரணணின், "தஞ்சையில் 5 மாதத்திற்குப் பிறகு முதல் முறையாகக் குழந்தைகள் கடத்தல் நடந்துள்ளது. தமிழகத்தில் பிரசவ வார்டில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்களை பொறுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களாகிய நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழக்கம் வேண்டாம்" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications