அதிமுக தலைமை அலுவலகத்தில் அடிதடி! ஏன் பாதுகாப்பு அளிக்கவில்லை தெரியுமா? அமைச்சர் மா.சு முக்கிய தகவல்
சென்னை: அதிமுக தலைமைச் செயலகத்தில் அடிதடி தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தென்காசி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிபட்டி கிராமத்தில் அதிக அளவில் புற்று நோய் பரவுவதாக வந்த புகாரை அடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அங்குப் பாதிக்கப்பட்ட நபர்கள் , சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களை நேரில் சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் நேற்று நடந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் ஓரேநாளில் 17 லட்சத்து 55 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி அவசியம் குறித்து முதல்வர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

வேக்சின் பணிகள்
அடுத்த தடுப்பூசி முகாம் எப்போது நடைபெறும் என விரைவில் அறிவிக்கப்படும். இதுவரை 18 வயதைக் கடந்தவர்கள் 93.23 சதவீதம் பேர் வேக்சின் போட்டுக் கொண்டு உள்ளனர். அதேபோல இரண்டாம் டோஸ் வேக்சினை 87.25 சதவீதம் பேர் போட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மிக விரைவில் 100 சதவீதம் வேக்சின் என்ற இலக்கு எட்டப்பட்டும். தமிழகத்தில் இன்னும் 33 லட்சம் பேர் முதல் டோஸ் வேக்சினும், 1.6 கோடி பேர் இரண்டாம் டோஸ் வேக்சினும் போட்டுக் கொள்ளவில்லை.

பச்சிளங் குழந்தைகள்
இந்த வாரம் ஒன்றிய அரசின் சார்பில் தனியார் மருத்துவமனையில் பூஸ்டர் ஊசி போடும் பணி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஒருங்கிணைந்த மகப்பேறு பச்சிளங்குழந்தைகள் மருத்துவத்திற்கான அனைத்து விதமான நவீன வசதிகளும் அரசு மருத்துவமனையில் உள்ளது. இந்த வசதிகள் எந்தெந்த மருத்துவமனையில் உள்ளது என அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அறிவிப்புப் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புற்றுநோய் அதிகரிப்பு?
மேலும் தென்காசி மாவட்டம் ஆராய்ச்சிபட்டியில் அதிகமானவர்களுக்குப் புற்றுநோய் இருப்பதாகப் புகார்கள் வந்த நிலையில் அங்கு ஆய்வு செய்துள்ளோம். அங்கு 1340 பேர் 18 வயதைக் கடந்தவர்கள் உள்ளார்கள். இவர்களில் ஒரு சிலருக்குப் புற்றுநோய் பதிப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்குக் கடந்த நான்கு நாட்களாக நடத்தப்பட்ட ஆய்வில் 13 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய், 13 பேருக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

முக்கிய ஆய்வு
இது குறித்து உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்கப்படும். மேலும் இந்த பகுதியில் புற்றுநோய் பரவல் குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வு இன்னும் ஒருவாரத்தில் நடத்தப்படும். இந்த பகுதியில் உள்ளவர்கள் சங்கரன்கோவில் , கழுகுமலைக்குப் பேருந்து வசதி கேட்டுள்ளனர். விரைவில் பேருந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மருத்துவத்துறையில் உள்ள 4328 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" என்றார்.

அதிமுக விவகாரம்
தொடர்ந்து அதிமுக விவகாரம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், "அதிமுக தலைமைச் செயலகத்திற்கு ஓ.பி.எஸ் போகும் முன்னரே பாதுகாப்பு கேட்டிருந்தால் தமிழக அரசு உரியப் பாதுகாப்பு கொடுத்திருக்கும். ஆனால் அவர்கள் சொல்லவில்லை. வானரகத்துக்கு போகும் முன்னாடி அவ்வை சண்முகம் சாலைக்குப் போவதாக அவர்கள் சொல்லியிருந்தால் நாங்கள் முன்னெச்சரிக்கை எடுத்திருப்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications