முதலில் இதற்கு பதில் சொல்லுங்க ஆளுநரே.. ராமர் சிலையை பிரதமர் மோடி தொடக்கூடாதா? மனோ தங்கராஜ் கேள்வி!
சென்னை: ஆளுநர் முதலில், சனாதன தர்ம சாஸ்திரங்களின்படி ராமர் சிலையை பிரதமர் மோடி தொடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என சங்கராச்சாரியர்கள் கூறியுள்ளதற்கு தனது பதிலை கூறட்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த படங்களை பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, "ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இது சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், திராவிட கட்சிகளை சேர்ந்த பலரும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து ஆளுநர் வாழ்த்துக் கூறியதை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள பதிவில், "திருவள்ளுவர் யார், அவர் என்ன போதித்தார் என்பதை விட்டு விடுங்கள், அது உங்களுக்கு புரியாது தமிழ் நாட்டு மக்கள் அதை பார்த்து கொள்வார்கள். ஆளுநர் முதலில், சனாதன தர்ம சாஸ்திரங்களின்படி ராமர் சிலையை பிரதமர் மோடி தொடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என சங்கராச்சாரியர்கள் கூறியுள்ளதற்கு தனது பதிலை கூறட்டும். இது மோடி/சங்கராசாரியார்கள்/ சனாதனம்-சர்சயை திசை திருப்பும் முயற்சி என்பது அனைவருக்கும் தெரியும்." எனத் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு சங்கராச்சாரியார்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றர். ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்ய பூரியின் கோவர்தன் மடத்தின் பீடாதிபதி மறுத்துள்ளார். அயோத்தி ராமர்கோவிலில் பிரதமர் மோடி பூஜை செய்வதற்கு பூரி சங்கராச்சியார் மற்றும் சில மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதனை குறிப்பிட்டு ஆளுநருக்கு கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ்.












Click it and Unblock the Notifications