என் தலையை சீவி விடுவாயா.. மிரட்டலா அண்ணாமலை? நான் சாவர்க்கர் பரம்பரையில்ல.. அமைச்சர் மனோ பதிலடி
சென்னை: மன்னிப்பு கேட்காவிட்டால் என் தலையை சீவி விடுவீரா என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.
ஆவின் பால் நிறுவனம், பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திவிட்டு டிலைட் என்ற பெயைல் ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்து இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, "தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மொத்தமாக சென்னையில், சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40% பங்குள்ள, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல் ஆகும். ஏற்கனவே 6% கொழுப்புச் சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79% கொழுப்புச் சத்தே இருப்பது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) அங்கீகரித்த பரிசோதனைக் கூடத்தில், தமிழ்நாடு பாஜக மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
இந்தச் சோதனை அறிக்கையை அமைச்சரின் பரிசீலனைக்காக இணைத்திருக்கிறோம். இவ்வாறு கொழுப்புச் சத்துக்களை குறைத்து ஆவின் நிறுவனத்தின் பாலை நம்பியிருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்று விளையாடி கொண்டிருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. மேலும், பாலில் கொழுப்புச் சத்தைக் குறைத்து விட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்து வருவதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பால் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.
அதில், "அந்த அறிக்கையில் உண்மை தன்மை கிடையாது. வடமாநிலங்களை சேர்ந்த நிறுவனங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆவின் நிறுவனத்துக்கு எதிராக பேசி வருகிறார்கள்." என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, "திரு மனோ தங்கராஜ் அவர்களே, இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும்.
உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு." என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையின் இப்பதிவுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் தளத்தில் பதிலளித்து உள்ளார்.
அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "ரபேல் வாட்சு கட்டி ஆடு மேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வடநாட்டுகைக்கூலி அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம்.. மிரட்டலா?
எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது. இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும், பால் உற்பத்தியளர்களின் நலன் சார்ந்தது. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்; கலைஞரின் உடன்பிறப்புகள்; தளபதியின் தம்பிகள்; தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள்!" என்றார்.












Click it and Unblock the Notifications