துருவித் துருவி ED விசாரணை.. விடிந்ததும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி! பரபர!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சந்தித்துள்ளார். அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி சந்தித்துப் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் பொன்முடி வீடு, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி வீடு, அலுவலகங்கள் உட்பட அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 17ஆம் தேதி சோதனை நடத்தினர். சோதனையின்போது கணக்கில் வராத ரூ.81 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாகவும், வெளிநாட்டுக் கரன்ஸிகள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை: 13 மணி நேர அமலாக்கத்துறை ரெய்டுக்குப் பிறகு அன்று இரவே அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அதிகாரிகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாலை 3 மணியளவில் நிறைவடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்குச் சென்றார்.
நேற்று மாலை விசாரணைக்கு மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி அமைச்சர் பொன்முடி மீண்டும் நேற்று மாலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கவுதம சிகாமணியும் விசாரணைக்கு ஆஜரானார்.
நேற்று இரவு வரை விசாரணை: இருவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் துருவித் துருவி கேள்விகளைக் கேட்டு, பதில்களைப் பெற்று பதிவு செய்தனர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்று, அமைச்சர் பொன்முடி எம்.பி. கவுதம சிகாமணி ஆகியோர் நேற்று இரவு வீட்டிற்கு புறப்பட்டனர். இரண்டு நாட்களாக அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடியிடம் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில்களைப் பெற்றுள்ளனர்.
அமலாக்கத்துறை நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், கனிமவளத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது, அவரது மகன், உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் செம்மண் குவாரி உரிமம் வழங்கியது தெரியவருகிறது. சட்ட விரோத செம்மண் குவாரி மூலம் கிடைக்கப்பெற்ற பல லட்ச ரூபாய் பணம் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் பினாமிகள் பெயரிலான வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
ஹவாலா மோசடி?: இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபுஅமீரகத்தில் உள்ள 2 நிறுவனங்களின் வங்கி கணக்குகளுக்கு முறைகேடாக பணம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தோனேசிய நிறுவனம் ரூ.41.57 லட்சத்துக்கு வாங்கப்பட்டு, பின்னர் 2022-ல் ரூ.100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த வெளிநாட்டு முதலீடுகள் நடந்தபோது, அதிகமதிப்பில் ஹவாலா பணமாக மாற்றப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி. ஆகியோர் தொடர்புடைய 7 இடங்களில் கடந்த17-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. பொன்முடி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.81.70 லட்சம்கணக்கில் வராத ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அமலாக்கத்துறை விளக்கம்: முறையாக விளக்கம் அளிக்கப்படாத ரூ.13 லட்சம் மதிப்பிலான பிரிட்டிஷ் பவுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை திசைதிருப்பும் விதமாக, பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும், அவர்களுக்கு சொந்தமான மருத்துவமனை மூலம் கிடைக்கப்பெற்றது போன்று போலியான கணக்கு மற்றும் ஆவணங்களை தயாரித்ததும், அமலாக்கத் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, தடுக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடான கணக்கு விவரங்கள் அனைத்தும் வழக்கில் தொடர்புடைய ஒருவர் மூலம் பெறப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் கணக்கு விவரங்களுக்கு அவர்கள் சொல்லும் காரணம் நம்பத்தகுந்ததாக இல்லை. சொத்துகள், நிறுவனங்கள் வாங்கியது, பிற நிறுவனங்களில் முதலீடு செய்தது சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் நடந்திருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதல்வருடன் சந்திப்பு: இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இந்த குற்றச்செயலில் நேரடியாக தொடர்புடைய ரூ.41.90 கோடி மதிப்பிலான நிரந்தர வைப்புத் தொகை, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி ஆழ்வார்பேட்டையில் இருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார். பெங்களூரில் இருந்து நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பிய நிலையில் இன்று முதல்வரைச் சந்தித்துள்ளார் அமைச்சர் பொன்முடி. அமலாக்கத்துறை விசாரணை தொடர்பாக முதலமைச்சரிடம் விளக்கம் அளிக்க அமைச்சர் பொன்முடி, முதல்வரைச் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உறுதியளித்த ஸ்டாலின்: முன்னதாக, அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை குறித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு, முதல்வர் ஸ்டாலின், பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்காக கிளம்பிய நேரத்தில் தான் ரெய்டு நடைபெற்றது. பெங்களூரில் இருந்தபோதும் தொலைபேசியில் அழைத்து அமைச்சர் பொன்முடியுடன் முதல்வர் ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று முதல்வர் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்துள்ளார் அமைச்சர் பொன்முடி.












Click it and Unblock the Notifications