ஆளுநர் உண்மை தெரிஞ்சு பேசணும்.. எதிர்க்கட்சியினர் மாதிரி பேசக்கூடாது.. அமைச்சர் பொன்முடி காட்டம்!
சென்னை : ஆளுநர் அரசியல்வாதி போன்றும், எதிர்கட்சிகள் போன்றும் பேசுவது வருந்தத்தக்கது. துணைவேந்தர்களை அழைத்து அரசியல் பேசுவதற்காகவே ஆளுநர் ஊட்டிக்கு சென்றிருக்கிறார். தமிழ்நாட்டில் கல்வித்தரம் குறைந்துவிட்டது என்று கூறும் ஆளுநர் எத்தனை கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார் என அமைச்சர் பொன்முடி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. குறிப்பாக வேலைவாய்ப்பு திறன் கொண்ட பொறியியல் பட்டதாரிகள் கிடைப்பதில்லை என்று தொழில்துறையினர் கூறுகின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், பொறியியல் பட்டதாரிகளை விட பாலிடெக்னிக் மாணவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கிறது. கல்லூரிகளில் பாடம் நடத்தும் முதுகலை பட்டதாரிகள், தினக்கூலி போல மாதத்திற்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் பெறுகின்றனர், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பன்முக திறன் கொண்ட
கல்வியை வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும், முதலீட்டாளர்களை சந்தித்து கேட்பதாலோ அல்லது பேசுவதாலோ மட்டுமே முதலீடுகள் வந்துவிடாது என கூறிய ஆளுநர் ரவி, உலகலாவிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு பொருத்தமான சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு திறமையான திறன்மிக்க மனித வளத்தை உருவாக்குவதே சிறந்த வழி என்றும் பேசினார்.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த கருத்துக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீடுகள் விவகாரத்தில் உண்மைத் தன்மையை அறிந்து கவர்னர் பேச வேண்டும், பேப்பரையாவது கவர்னர் படிக்க வேண்டும். அரசியல்வாதி போன்றும், எதிர்கட்சிகள் போன்றும் ஆளுநர் பேசுவது வருந்தத்தக்கது எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் பொன்முடி.
மேலும், அமைச்சர் பொன்முடி பேசுகையில், "துணைவேந்தர்களை அழைத்து அரசியல் பேசுவதற்காகவே கவர்னர் ஊட்டிக்கு சென்றிருக்கிறார். தமிழ்நாட்டில் பாஜகவை ஏற்பவர்கள் இல்லை. அதனால் தான் ஆளுநர் மூலமாக கொண்டு வருவதற்கு முயற்சியை செய்கிறார்கள். வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டிக்கு சென்றுள்ளார், அவர் ஊட்டிக்கு சென்ற பிறகு சென்னையில் மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் கல்வித்தரம் குறைந்துவிட்டது கவர்னர் என்று கூறுகிறார். ஆளுநர் எத்தனை கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார்? தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் கல்வி தரம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் முன்னேறி உள்ளன.
புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நான் முதல்வர் திட்டத்தினை சிங்கப்பூர் கல்வி அமைச்சரே பாராட்டி உள்ளார். தமிழ்நாட்டில் கல்வியின் தரம் குறைந்துவிட்டதாக கவர்னர் ஆர்.என்.ரவி கூறுவது முரணாக உள்ளது. அரசியல் செய்யும் நோக்கத்தோடு ஆளுநர் ரவி தொடர்ந்து பேசி வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் கல்வித்துறையில் அரசியலை புகுத்த முயற்சிக்கிறார்." என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications