தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தல்: அமித்ஷா மகன் ஆதரவுடன் அமைச்சர் பொன்முடி மகன் வெல்வாரா?
சென்னை: தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தல் சனிக்கிழமையன்று அதன் பொதுக்குழுவில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும் பிசிசிஐ தலைவருமான ஜெய்ஷாவின் ஆதரவு பெற்றவராக கூறப்படும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் இளைய மகன் டாக்டர் அசோக் சிகாமணி மற்றும் அவரை எதிர்த்து எஸ்.பிரபு ஆகியோர் களத்தில் உள்ளனர்.
கிரிக்கெட் சங்கங்களைப் பொறுத்தவரை சூதாட்ட புகார்களுக்கும் பஞ்சமில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டப் புகாரில் சிக்கிய போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை தங்கள் வசம் வைத்திருந்த இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் குடும்பம் சிக்கியது. சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் வசமாக மாட்டினார். கிரிக்கெட் சங்க பதவிகளை குறிப்பிட்ட நபர்கள் பரம்பரை சொத்தாக ஆண்டு அனுபவிப்பதை தடுக்கும் வகையில் லோதா கமிட்டி சில பரிந்துரைகளை வழங்கியது.

லோதா கமிட்டி
தற்போது அனைத்து கிரிக்கெட் சங்க தேர்தல்களிலும் லோதா கமிட்டி பரிந்துரைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் பரிந்துரைகளில் மிக முக்கியமானது பதவிகளில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிப்பது தொடர்பானது. இதனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் மீண்டும் போட்டியிட முடியாத நிலை உருவானது.

பொன்முடி மகன்
2019-ம் ஆண்டு இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் மகள் ரூபா குருநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் தலைவர் பதவிக்கு மிக முயற்சித்தவர் தற்போதைய அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி. ஆனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முகமாகவும் மூலவராகவும் இருக்கும் இந்தியா சிமெண்ட் சீனிவாசன் தரப்பின் சமாதான முயற்சிகளில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவரானார் அசோக் சிகாமணி.

டாக்டர் அசோக் சிகாமணி
டாக்டர் அசோக் சிகாமணியைப் பொறுத்தவரையில் பல ஆண்டுகளாக கிரிக்கெட் சங்கங்களுடன் தொடர்பில் இருப்பவர். விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் பதவி வகித்தார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் துணைத் தலைவராக இருக்கும் நிலையில் தற்போது இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் அணியின் வேட்பாளராக டாக்டர் அசோக் சிகாமணி நிற்கிறார். அவருக்கு எதிராக எஸ்.பிரபு களம் காண்கிறார்.

ஜெய்ஷா ஆதரவு?
இது தொடர்பாக கிரிக்கெட் வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, லோதா கமிட்டி பரிந்துரைப்படி அசோக் சிகாமணி தேர்தலில் போட்டியிட முடியாது என்கிறது ஒரு தரப்பு. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்சா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ தலைவராக உள்ளார். ஜெய்ஷாவின் ஆதரவும் அனுசரணையும் இருப்பதால் அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி தேர்தலில் களம் காண முட்டுக்கட்டை இல்லை என்கிற நிலைமை இருக்கிறது என்கின்றனர். தலைவர் பதவி தவிர பல்வேறு பதவிகளுக்கும் சனிக்கிழமையன்று தேர்தல் நடைபெறுகிறது. வெல்வாரா அமித்ஷா மகன் ஆதரவு பெற்ற பொன்முடி மகன் அசோக் சிகாமணி?












Click it and Unblock the Notifications