அமைச்சர் பி.டி.ஆர் தொடங்கி வைத்த சேவை திட்டம்! வயசான காலத்தில் இனி அலைய வேண்டாம்!
சென்னை: தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று அவர்களின் வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான புதிய சேவையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்திருக்கிறார்.
இதற்காக இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் தமிழக அரசு சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றையும் போட்டிருக்கிறார்.
அதன் விவரம் வருமாறு'

7,15,761 ஓய்வூதியதாரர்கள்
மாநில அரசின் ஓய்வூதியம் பெறும் சுமார் 7,15,761 ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வருடாந்திர நேர்காணலிற்காக (Mustering)சமர்ப்பிக்கின்றனர். தற்போது, ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு அவர்களது விருப்பங்களின் அடிப்படையில் பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் வருடாந்திர நேர்காணல் (Mustering) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூன்று வழிகள்
(i) ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் நேரடியாகசென்று பதிவு செய்தல் (ii) தபால் மூலம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தல் மற்றும் (iii) மின்னணு விரல்ரேகை சாதனத்தைப் பயன்படுத்தி ஜீவன் பிரமான் இணையம் மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் (DLC) சமப்பித்தல். மேலும், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் வருடாந்திர நேர்காணலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இருப்பிடம் சென்று
தற்போது ஜூலை முதல் செப்டம்பர் 2022 வரையிலான மாதங்களில் நடைபெறும் வருடாந்திர நேர்காணலில் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களின் வயதினை கருத்தில் கொண்டும் அவர்கள் நேரில் வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் (IPPB) மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று ஜீவன் பிரமான் இணையத்தின் வழியாக மின்னணு வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கான சேவையை உள்ளடக்கிய ஐந்து முறைகளிலான வருடாந்திர நேர்காணலை நடைமுறைப்படுத்த தமிழக அரசானது உத்தரவினை பிறப்பித்துள்ளது.

அலைச்சல் வேண்டாம்
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது (IPPB) ஒரு மின்னணு வாழ்நாள் சான்றிதழுக்கு ரூ.70/- என்ற கட்டணத்தில் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று சேவைகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு இச்சேவையை வழங்குவதற்காக, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் முன்னிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் (IPPB) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.












Click it and Unblock the Notifications