ஜிஎஸ்டி நிலுவையால் தமிழகத்திற்கு ரூ.20,000 கோடி இழப்பு! பட்ஜெட்டில் புள்ளிவிவரத்தை அடுக்கிய பிடிஆர்!
சென்னை: ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையால் தமிழகத்திற்கு இருபதாயிரம் கோடி ரூபாய் இழப்பு நேரிடும் என பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் வெளியிட்டார்.
இதற்கான காரணத்தையும் பட்டியலிட்ட அவர் மத்திய மாநில அரசுகளின் நிதி உறவுகள் பற்றி விவரமாக எடுத்துரைத்தார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த போது அமைச்சர் பி.டி.ஆர். இது தொடர்பாக கூறியதாவது;

ரூ.20,000 கோடி
''மதிப்புக்கூட்டுவரி நடைமுறையில் இருந்தபோது,தமிழ்நாடு அடைந்த வருவாய் வளர்ச்சியை, சரக்கு மற்றும் சேவைவரிச்சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னர் எட்ட இயலவில்லை. இதுமட்டுமின்றி,கோவிட் பெருந்தொற்று அனைத்து மாநிலங்களின் நிதிநிலையை பெருமளவில் பாதித்துள்ளது. இந்நிலையில்,சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்கும் கால வரையறை 30.6.2022 ஆம் நாளன்றுமுடிவுக்கு வருகிறது. இதனால்,வரும் நிதியாண்டில், சுமார் 20,000 கோடிரூபாய் நிதி இழப்பினை தமிழ்நாடு சந்திக்க நேரிடும்.''

செவி சாய்க்கும்
''கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்க நிலையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வருவாய் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால், இந்த இழப்பீட்டை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு ஒன்றிய அரசிற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்த நியாயமான கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி சாய்க்கும் என நம்புகிறேன்.''

புள்ளி விவரம்
''நாட்டின் மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 6.12 சதவீதமாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 10 சதவீதமாகும். இவற்றிற்கு ஏற்ற நிதிப்பகிர்வை மத்திய நிதிக்குழுக்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை. 15வது மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு இடையேயான நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு வெறும் 4.079 சதவீதமாகும். 15வது மத்திய நிதிக்குழு ஐந்தாண்டு காலத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியமாக மொத்தம் 21,246 கோடி ரூபாயை பரிந்துரைத்துள்ளது. ''

14-வது நிதிக்குழு
''இத்தொகையானது, 14வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 17,010 கோடி ரூபாய் மானியங்களைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு குறிப்பிட்ட மானியங்களையும், துறைகளுக்கு குறிப்பிட்ட மானியங்களையும் 15வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. இத்தொகையை நடைமுறையிலுள்ள ஒன்றிய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுடனும் (Centrally Sponsored Schemes) ஒன்றிய துறைத் திட்டங்களுடனும் (Central Sector Schemes) இணைக்காமல், தனியாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.''












Click it and Unblock the Notifications