ஆன்லைன் சூதாட்ட விளம்பரம்! நடிகர்கள் திருந்த வேண்டும்! சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புத்திமதி!
சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் தாங்களாகவே திருந்த வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாகவே ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
அண்மையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது பற்றி தமிழக அரசு பொதுமக்களிடம் கருத்து கேட்பு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆயுதப்படை காவலர் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா? - அமைச்சர் ரகுபதி கொடுத்த விளக்கம்!
ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் நாள்தோறும் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி பல தரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலரும் விபரீத முடிவை நாடி குடும்பத்தை பரிதவிக்கவிடும் சோக நிகழ்வுகள் தொடர் கதையாக உள்ளன. ஓய்வு நேரத்தை எப்படி கழிக்க வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் இது போன்ற ஆபத்துக்களில் இளசு முதல் பெரிசு வரை சிக்கிக் கொள்கிறார்கள்.
நடிகர்கள் திருந்தணும்
இது போதாதென்று ஆன்லைன் ரம்மி விளையாடுங்க என சமூக பொறுப்பற்ற ஒரு சில நடிகர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு பல்லை இளித்துக்கொண்டு நடிக்கின்றனர். அண்மையில் கூட சரத்குமார் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்திருப்பது சர்ச்சையானது. இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் தாங்களாகவே திருந்த வேண்டும் என அறிவுரை வழங்கியிருக்கிறார்.
நிரந்தர தடை
இது மட்டுமல்லாமல் தமிழகத்தை பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாகவே ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது பற்றி மக்கள் கருத்துக் கேட்பு நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இதன் மீது அரசுத் தரப்பில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
பாமக வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை திருத்தப்பட்ட முறையில் மீண்டும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வருவது கவனிக்கத்தக்கது. மது, போதைப் பொருட்கள், ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருவது கவனிக்கத்தக்கது.