கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை! எடப்பாடி கிளப்பிய புகார்.. அமைச்சர் ராஜேந்திரனின் பதிலை பாருங்க
சென்னை: கரும்பு விலை உயர்த்தாதது மற்றும் சிறப்பு ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.215/-ஐ தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வழங்கவில்லை என தமிழக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அவரது அறிக்கைக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திரன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 2021ஆம் ஆண்டு புதிய அரசு பொறுப்பேற்றவுடன் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று வேளாண்மைத்துறைக்கென இதுவரை நான்கு தனி நிதிநிலை அறிக்கைகளை அளித்து விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதன் காரணமாக 115இலட்சம் மெட்ரிக் டன்களுக்கு மேலாக உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் புதிதாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய மின் இணைப்புகள் வழங்கியது. புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியது. கிராமப்புற விவசாயத்தை மேம்படுத்த கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தினை செயல்படுத்தியது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றப்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடைப்பெற்ற பத்தாண்டுகால செயலற்ற அ.தி.மு.க ஆட்சியில் சர்க்கரை ஆலைகள் யாவும் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்த உடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் காரணமாக சர்க்கரை ஆலைகளின் செயல்திறன் உயர்ந்து வருகிறது.
கரும்பு விலை கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 2011 ஆம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் கரும்பு விலை டன் ஒன்றுக்கு 2250-இருந்து 5.500 மட்டுமே உயர்த்தி ரூ.2750-மாக வழங்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட கரும்பு விலையும் உரிய நேரத்தில் வழங்காமல் தாமதமாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சி முடிவின் போது கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கரும்பு விலை நிலுவைத் தொகை ரூ.675.52 கோடியாக இருந்தது.
அ.தி.மு.க ஆட்சியில் 2018-ம் ஆண்டு கரும்புக்கு வழங்கப்பட்டு வந்த மாநில அரசு பரிந்துரை விலை ரத்து செய்யப்பட்டதுடன் கரும்பு விலை நிர்ணயம் சம்பந்தமான முத்தரப்பு கூட்டமும் நடத்தப்படவில்லை. இவ்வாறு சர்க்கரை ஆலைகளை அழிவுப்பாதைக்கு கொண்டுசென்றதை மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் மறைத்து, உண்மைக்கு புறம்பான செய்திகளை தற்போது கரும்பு விவாசயிகளின் மீது அக்கறை கொண்டுள்ளதைப் போல நாடகமாடுகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இவ்வரசு பொறுப்பேற்றவுடன் 2020-21 அரவைப் பருவம் முதல் 2023-24 அரவைப் பருவம் வரை கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூ.2750லிருந்து ரூ.2900, ரூ.2950, ரூ.3016.25 மற்றும் ரூ.3134.75 என படிப்படியாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து சர்க்கரை ஆலைகளின் கரும்பு அரவைப் பருவ காலம் செப்டம்பர் 2024 மாதத்தில் நிறைவடைந்த நிலையில் அனைத்து சர்க்கரை ஆலைகளிலிருந்தும் சிறப்பு ஊக்கத் தொகை பெறுவதற்கான தகுதி வாய்ந்த கரும்பு விவசாயிகளின் முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் 2024 அக்டோபர் மாதம் முதல் சர்க்கரைத்துறை அலுவலகத்தில் சரிபார்க்கும் பணிக்காக பெறப்பட்டு வருகிறது. அதன்படி தகுதி வாய்ந்த 32 சர்க்கரை 28.10.2024 வரை 23 சர்க்கரை ஆலைகளிலிருந்தும் தரவுகள் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒன்பது தனியார் சர்க்கரை ஆலைகளிடமிருந்து தரவுகளைப் பெறுவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகால செயலற்ற அ.தி.மு.க. ஆட்சியில் ஊக்கத்தொகை வழங்கப்பட்ட ஆண்டு முதல் 2017-2018 பருவத்திற்கு சுமார் எட்டு மாத கால அளவிலும், 2018-2019 பருவத்திற்கு சுமார் ஐந்து மாத கால அளவிலும், 2019-2020 பருவத்திற்கு சுமார் இரண்டு மாத கால அளவிலும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்ட நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் சுமார் ஒருமாத காலத்திலேயே தகுதி வாய்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் கரும்பு விவசாயிகளின்மீது அக்கரை கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2023-24 அரவைப் பருவத்திற்கு வழங்கப்பட வேண்டிய சிறப்பு ஊக்கத் தொகையை வழங்குவதற்கான அரசாணையை கடந்த 17.10.2024 அன்று பிறப்பித்துள்ளார்கள். அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத் தொகை சரியான தகுதி வாய்ந்த கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுவதற்கு ஏதுவாக அரசாணையில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் இதுவரை பெறப்பட்ட 23 சர்க்கரை ஆலைகளின் தரவுகள் சர்க்கரைத்துறை மற்றும் அரசு தரவு மையத்தில் தற்போது கூர்ந்தாய்வு செய்யப்பட்டு ஒன்பது சர்க்கரை ஆலைகளின் தரவுகள் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் தலைமையிலான குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையிலான குழுவின் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற உடன் சம்பந்தப்பட்ட தகுதி வாய்ந்த கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரிடையாக அனுப்பி வைக்கப்படும். பிற சர்க்கரை ஆலைகளின் தரவுகளும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெற்று நான்கு வார காலத்திற்குள் தகுதி வாய்ந்த கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வழங்கிட துரித நடவடிக்கையினை இவ்வரசு எடுத்து வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி, கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சிறப்பு ஊக்கத் தொகையை விரைந்து வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று வரை சிறப்பு ஊக்கத் தொகையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளையும் இவ்வரசு எடுக்கவில்லை என தெரிவித்திருப்பது அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications