தமிழ்நாட்டில் நடந்திருப்பது அரசியல் பேரிடர்.. சோஃபா வந்தவுடன் சிலர் போய்விட்டனர் - உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாட்டில் நடந்திருப்பது அரசியல் பேரிடர் என்றும், சோஃபா வந்தவுடன் சிலர் நம்மை விட்டு போய்விட்டனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
மேலும் தமிழகத்தை திமுக மீட்கும் என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.

மேலும் அவர் பேசியதாவது, "இன்று நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அத்தனை பேரும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இன்று சில பேர் சோஃபா வந்தவுடன் நம்மை விட்டு போய்விட்டார்கள். ஆனால், நீங்கள் அத்தனை பேரும் கழகத்தோடு இருப்போம் என்று உறுதியுடன் இருக்கிறீர்கள். இஸ்லாமியர்களுக்கும், கழகத்திற்குமான உறவை என்றும் பிரிக்க முடியாது. சிறுபான்மை மக்களுக்கு கழகமும், தலைவர் மு.க.ஸ்டாலினும் என்றும் காவலாக நிற்பார்.
இப்போது ஏற்பட்டிருக்கக்கூடிய அரசியல் பேரிடர் காலத்திலும், திராவிடர் கழகம் உங்களுக்காக நின்று காக்கும். நாட்டை நிச்சயம் மீட்போம்" என்று பேசியிருக்கிறார்.
சோஃபா பஞ்சாயத்து
சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும்பான்மை பெறாத போது, விசிகவிடம் ஆதரவு கேட்டிருந்தது. விசிக அலுவலகத்திற்கு தவெக தலைவர்கள் போவதற்கு முன்னர் சோஃபா ஒன்று அலுவலகத்திற்கு புதியதாக வந்தது. இதை பார்த்த எதிர்க்கட்சிகள், 'புஷ்பா' படத்தில் வருவதை போல தவெக பிளான் செய்கிறது என்று விமர்சித்திருந்தன.
பின்னர் தவெகவுக்கு விசிக தனது ஆதரவை கொடுத்து, அமைச்சரவையிலும் இடம் பெற்றது. இந்த பின்னணியில்தான் தற்போது உதயநிதி ஸ்டாலின் விமர்சனங்களை வைத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேபோல, தவெக ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததைதான் அரசியல் பேரிடர் என விமர்சித்திருப்பதாகவும் விளக்கமளித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications