பின்வாசல் வழியாக வெளியேறிய தமிழக அமைச்சர்.. பத்திரிகையாளரை சந்திக்க மறுப்பு.. பின்னணி?
மதுரை: சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன். இந்நிலையில் தான் மதுரையில் நடந்த பட்டமளிப்பு விழா முடிவடைந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து பின்பக்கம் காரில் ஏறி சென்ற சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

இதில் மதுரை மேலூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டமளித்தார். மொத்தம் 700 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினா்.
இந்த பட்டமளிப்பு விழாவை முடித்த பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து பேட்டி கேட்டனர். அப்போது அவர் பட்டமளிக்கும்போது அணிந்திருக்கும் கருப்பு நிற கவுன் அணிந்திருந்தார். இதனால் அவர், '' கவுன் அணிந்திருப்பதால் பேட்டி கொடுக்க முடியாது. அதனால் பட்டமளிப்புக்கான கவுனை கழற்றிவிட்டு பேட்டியளிக்கிறேன்'' என உணவு சாப்பிட சென்றார்.
இதையடுத்து அமைச்சர் விஸ்வநாதனுக்காக பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். ஆனால் விஸ்வநாதன் தனது காரை கல்லூரியின் பின் வாசல் வழியாக வரவழைத்து அதில் ஏறி சென்றார். பத்திரிகையாளர்களை தவிர்க்க தொலைபேசியில் பேசுவது போல் கண்டுக்கொள்ளாமல் சென்றார்'' என்றார். இது விவாதத்தை கிளப்பி உள்ளது.
ஏனென்றால் விஸ்வநாதன் அமைச்சரான பிறகு தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மதுரை மேலூரில் நடந்த மாரத்தானில் பங்கேற்ற சிறுமிகளின் கால்களை பிடித்து விட்டதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு விஸ்வநாதன் அளித்த விளக்கத்தில் அப்பா ஸ்தானத்தில் தான் நடந்து கொண்டதாக கூறினார்.
இருப்பினும் விஸ்வநாதன் மீது ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகாரளித்தார். விஸ்வநாதன் விவகாரம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணை முடியும் வரை அவரை அமைச்சர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுபற்றி நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பலாம் . இது நடந்தால் மீண்டும் அந்த பிரச்சனையை கிளறுவது போல் இருக்கும் என்று நினைத்து அமைச்சர் விஸ்வநாதன் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் புறப்பட்டு சென்று இருக்கலாம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications