அத்துமீறிய Meta.. இன்ஸ்டாகிராமில் சகிக்க முடியாத விளம்பரங்கள்! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய.. மத்திய அரசு
டெல்லி: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான விளம்பரங்கள் இடம்பெறுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதன் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு (Meta) மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பஸ்ல, டிரெயின்ல போகும்போது.. இன்ஸ்டாகிராம் ஓபன் செய்தால் திடீரென ஏடாகூடமான விளம்பரங்கள் வருவதால், பக்கத்தில் இருப்பவர்கள் நம்மை பார்க்கும் பார்வையே மாறிவிடுகிறது. அதலும் சிறார்கள் இருக்கும் விளம்பரங்கள் வருவதால், பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த விளம்பரங்கள் குறித்து மத்திய அரசு ஆக்ஷனில் இறங்கியிருக்கிறது. இன்ஸ்டாகிராமில் சிறார் பாலியல் வன்கொடுமை மற்றும் சுரண்டலை ஊக்குவிக்கும் அல்லது அத்தகைய கண்டென்ட்களை பார்க்க வழிவகை செய்யும் அனைத்து விளம்பரங்களையும் உடனடியாக முடக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த 7 நாட்களுக்குள் விரிவான விளக்கத்தை அளிக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்ஸ்டாகிராம் தளம் சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதாகவும், அந்த விளம்பரங்கள் பயனர்களை டெலிகிராம் (Telegram) செயலியில் உள்ள சட்டவிரோத குழுக்களுக்கு அழைத்துச் செல்வதாகவும் பிபிசி நடத்திய புலனாய்வில் தெரியவந்தது. இதன் அடிப்படையிலேயே மத்திய அரசு தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த விவகாரத்தில் மெட்டா அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 67B-ன் படி, சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை வெளியிடுவது அல்லது பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
மெட்டா நிறுவனத்தின் பதில்
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மெட்டா நிறுவனம், "சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான கண்டென்ட்களுக்கு எங்கள் தளத்தில் துளியும் இடமில்லை. புகாருக்குள்ளான விளம்பரங்கள் மற்றும் கணக்குகள் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளன. இத்தகைய கண்டென்ட்களை கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எது எப்படியோ அடுத்தமுறை இன்ஸ்டாகிராமை ஓபன் செய்தால் எக்குத்தப்பான விளம்பரங்கள் வராமல் இருந்தால் சரி.












Click it and Unblock the Notifications