"ஏய் விடு டி.. போனை விடு.." எழும்பூர் ரயில் நிலையத்தில் TTR- சட்டக் கல்லூரி மாணவி கைகலப்பு
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்களுக்கும் (TTR) சட்டக் கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் இரு தரப்பினர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்று சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் வந்துள்ளார்.

அங்கு பணியில் இருந்த பெண் பயணச்சீட்டு பரிசோதகர்கள் அவரிடம் டிக்கெட் கேட்டுள்ளனர். அதற்கு அந்த மாணவி, "நான் ரயிலில் பயணம் செய்யவில்லை, உறவினரை வழியனுப்ப வந்தேன்" என்று கூறியுள்ளார்.
இதனால் பிளாட்பார்ம் டிக்கெட் கேட்டனர். அந்த டிக்கெட்டையும் அந்த மாணவி எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவரை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
விசாரணையின் போது மாணவியின் மொபைல் போனை டிக்கெட் பரிசோதகர் வாங்கி வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த மாணவி, "தன்னுடைய செல்போனை கொடுங்கள்" என்று கேட்டு வாக்குவாதம் செய்தார்.
ஒரு கட்டத்தில் அவர் செல்போனை கொடுக்காததால் திடீரென மாணவி, டிக்கெட் பரிசோதகரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான கைகலப்பு மற்றும் சண்டை உருவானது. அந்த டிக்கெட் பரிசோதகருடன் இன்னொரு டிடிஆரும் இருந்தார்.
தற்போது இச்சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மைக்காலமாக பயணிக்கும் டிடிஆருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை இவ்வாறு நடந்த மோதல்களின் முக்கிய சம்பவங்களை பார்க்கலாம். கடந்த மார்ச் மாதம் தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் இரயிலில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜோதி லிங்கம் என்ற டிடிஆர், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டை வைத்துக் கொண்டு மேல் படுக்கையில் படுத்திருந்த ஒடிசாவைச் சேர்ந்த ஒரு புலம் பெயர் தொழிலாளி, டிக்கெட்டைக் காட்ட மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். போதையில் இருந்த அந்த நபர் திடீரென டிடிஆரை கடுமையாகத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து ஜோலார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இரயில்வே போலீசார் அந்தப் பயணியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆந்திரா சித்தூர் ரயில் நிலைய சம்பவம் (ஜூன்): ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் பயணி ஒருவருக்கும் ரயில்வே அதிகாரி ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த இரயில்வே ஊழியர் தனது காலணியைக் (செருப்பு) கழற்றி பயணியைத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ரயில்வே நிர்வாகம் உடனடியாக அந்த ஊழியரை பணிநீக்கம் செய்து (Dismiss) நடவடிக்கை எடுத்தது.
மது போதையில் டிடிஆர் பயணி மீது தாக்குதல்: இதற்கு முன்பாக, கேரளா சென்ற ஒரு ரயிலில் மாற்றுத்திறனாளி பயணி ஒருவரை, டிக்கெட் கேட்கும் விவகாரத்தில் மது போதையில் இருந்த ஒரு டிடிஆர் காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோ வைரலானதை அடுத்து சம்பந்தப்பட்ட டிடிஇ உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.














Click it and Unblock the Notifications