அப்பாவை ஃபாலோ பண்ணுறாரா ஜேசன் சஞ்சய்? அரசியலா... சினிமாவா? ஒரே போட்டோவால் கிளம்பிய விவாதம்!
சென்னை: நடிகராக இருந்த விஜய் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார். ஆனால் அவர் அரசியலுக்கு வந்த பிறகும், அவரது குடும்பத்தைச் சுற்றிய பேச்சுக்கள் மட்டும் குறைந்தபாடில்லை. அரசியல் முடிவுகள் ஒரு பக்கம் என்றால், தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான வதந்திகள் இன்னொரு பக்கம் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
குறிப்பாக, விஜய் - சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள், விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருக்கிறது என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் பரவின. அதுபற்றி இருவரின் தரப்பிலும் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. இருந்தாலும், அந்த விவாதம் மட்டும் இன்னும் அடங்கவில்லை.

விஜய் குடும்ப சர்ச்சை
அதற்கு காரணமும் இருக்கிறது. முதலமைச்சராக விஜய் பதவியேற்ற விழாவில் கூட அவரது மகன் ஜேசன் சஞ்சயும், மகள் திவ்யா ஷாஷாவும் கலந்து கொள்ளவில்லை. அதற்கு முன்பும் பள்ளி விழா, கல்லூரி நிகழ்ச்சி, குடும்ப நிகழ்ச்சிகள் என பல இடங்களில் விஜய் இல்லாதது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பலவிதமாக பேசினார்கள். அதேபோல், ஜேசன் சஞ்சய் அம்மா சங்கீதாவுடன்தான் அதிகம் இருப்பதாகவும், அதனால்தான் அப்பாவைப் பற்றி எந்த மேடையிலும் பேசுவதில்லை என்றும் வதந்திகள் பரவின.
இந்த நிலையில், இப்போது ஒரு சாதாரண திருமண விழா புகைப்படம்தான் புதிய விவாதத்துக்கு காரணமாகி இருக்கிறது.
லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமியின் குடும்ப திருமண விழாவில் ஜேசன் சஞ்சய் நேரில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் லைகாவுடன் நெருக்கமாக இருக்கும் சஞ்சீவ் மற்றும் ஜிகேஎம் தமிழ்குமரனுடன் சேர்ந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

ரசிகர்கள் கமெண்ட்
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், "அப்படியே விஜய் மாதிரி இருக்காரே", "முதல்வர் விஜய் சமீபத்தில் எல்லா குடும்ப விழாக்களுக்கும் வேஷ்டி-சட்டையில்தான் போறாரு... இப்போ மகனும் அதே ஸ்டைலா?", "அப்பாவை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டாரா?" என்று கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், "இது வெறும் டிரஸ்ஸா... இல்ல இமேஜ் பில்டிங்களா?" என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
விஜய் மகனின் படம்
இந்த போட்டோ வைரலாக இன்னொரு காரணமும் இருக்கிறது. விஜய்யின் கடைசி திரைப்படமாக சொல்லப்படும் 'ஜனநாயகன்' இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. அதே நேரத்தில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' படமும் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இதனால், "அப்பாவின் கடைசி படம்... மகனின் முதல் படம்... இரண்டு தலைமுறையும் ஒரே நேரத்தில் மோத போகிறது" என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது.
ஜேசன் சஞ்சய் முயற்சி
சினிமா வட்டாரத்தில் கூட, "நடிகராக வராமல் நேரடியாக இயக்குநராக களம் இறங்கும் முடிவை எடுத்திருக்கிறார் ஜேசன் சஞ்சய். அதுவே அவர் தனக்கென ஒரு பாதையை தேர்வு செய்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது" என்ற பேச்சு இருக்கிறது.
ஆனால் சமூக வலைதளங்களில் வேறு மாதிரி விவாதம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. "விஜய் இப்போது அரசியலில் பிஸி... மகன் சினிமாவில் பிஸி... ஆனாலும் இருவரும் ஒரே மாதிரி எளிமையான தோற்றத்தில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது சும்மாவா?", "இது ஒரு குடும்ப அடையாளமா... இல்லை ரசிகர்கள் நினைப்பது மாதிரி அப்பாவை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டாரா?" என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு வேஷ்டி-சட்டை போட்டோவுக்கே இவ்வளவு பேச்சு என்றால், நாளை 'சிக்மா' படத்தின் இசை வெளியீட்டிலோ, டிரெய்லர் விழாவிலோ ஜேசன் சஞ்சய் மேடையில் பேசினால் இன்னும் எத்தனை விவாதங்கள் கிளம்புமோ என்ற எதிர்பார்ப்பும் இப்போதே ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது.














Click it and Unblock the Notifications