AIஆல் பறிபோன லட்சக்கணக்கான வேலைகள்? இந்தியாவில் நிலைமை ரொம்பவே மோசம்.. என்ன செய்தால் தப்பிக்கலாம்?
நியூயார்க்: ஏஐ தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், அதன் தாக்கம் வேலைவாய்ப்பு சந்தையிலும் தீவிரமாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. நிறுவனங்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் AI தொழில்நுட்பங்களை அதிகமாகப் பயன்படுத்தி வருவதால், பல துறைகளில் பணியாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஏஐ மிக வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக சாட்ஜிபிடி வருகை தந்த பிறகு உலகின் பல முன்னணி நிறுவனங்களும் ஏஐ துறையில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டன. பெரிய நிறுவனங்கள் கூட பல பில்லியன் டாலர் ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்தனர். குறுகிய காலத்தில் ஏஐ மின்னல் வேகத்தில் ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது.

ஏஐ வேலையிழப்பு
அதேநேரம் ஏஐ தொழில்நுட்பத்தால் வேலையிழப்பும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தொழில்நுட்ப துறையில் நடக்கும் பணிநீக்கம் தொடர்பான தகவல்களை பிரபல Layoffs.fyi நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் 2026ஆம் ஆண்டு இன்னும் பாதி மட்டுமே கடந்துள்ள நிலையிலேயே, உலகளவில் AI தொடர்பான பணிநீக்கங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு முழுவதும் பதிவான எண்ணிக்கையை ஏற்கனவே தாண்டியுள்ளது.
2026 ஜூலை 1ஆம் தேதி வரை உலகம் முழுவதும் சுமார் 1.28 லட்சம் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் AI காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த 2025ல் பதிவான AI தொடர்பான 1.25 லட்சம் பணிநீக்கங்களை விட அதிகமாகும். பல்வேறு நிறுவனங்களும் AI மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களை மிக வேகமாக ஏற்று வருவதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
அதிகரிப்பு
AIஆல் ஏற்படும் பணிநீக்கங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. 2020ஆம் ஆண்டு உலகளவில் சுமார் 81,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 2021ல் இந்த எண்ணிக்கை குறைந்திருந்தாலும், 2022ல் அது 1.65 லட்சத்தை தாண்டியது. 2023ல் கிட்டத்தட்ட 2.66 லட்சம் பணிநீக்கங்களுடன் உச்சத்தை எட்டியது. அதன்பிறகு 2024 மற்றும் 2025ல் சற்று குறைவு ஏற்பட்டாலும், 2026ன் முதல் ஆறு மாதங்களிலேயே கடந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கையை தாண்டி இருக்கிறது.
இந்தியா 2ம் இடம்
2020 ஜனவரி முதல் 2026 ஜூலை வரை பதிவான ஏஐ பணி நீக்கங்களில் 71.33 சதவீதம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. உலகின் மிக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அங்கு இயங்குவதால், ஏஐ யூஸேஜ் அங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே அங்கு வேலையிழப்பும் அதிகமாக இருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியா 7.16 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து ஜெர்மனி (3.43%), பிரிட்டன் (2.64%) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. மற்ற அனைத்து நாடுகளிலும் சேர்த்து சுமார் 15.44 சதவீத பணிநீக்கங்கள் நடந்துள்ளன.
இந்தியாவை மட்டுமே நாம் தனியாக எடுத்து பார்த்தாலும் கூட அனைத்து துறைகளிலும் வேலையிழப்புகள் ஒரே மாதிரியாக இல்லை. துறை வாரியாக எடுத்து பார்க்கும்போது, நமக்கு அதிர்ச்சி தரும் வகையில் கல்வித் துறை மிகவும் பாதிக்கப்பட்ட துறையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் பதிவான AI தொடர்பான பணிநீக்கங்களில் 21.67 சதவீதம் கல்வித் துறையில் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து நிதித் துறை (14.73%), உணவுத் துறை (12.26%), போக்குவரத்து துறை (11.03%) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அதிகரிக்கும் தேவை
பல ஆண்டுகளாக இங்கிருந்த டேட்டா பிராசஸ், வாடிக்கையாளர் சேவை மற்றும் நிர்வாகப் பணிகள் போன்ற துறைகளில் ஒரு பக்கம் வேலையிழப்பு அதிகமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் மெஷின் லேர்னிங் , டேட்டா சயின்ஸ், ஏஐ பாதுகாப்பு போன்ற புதிய துறைகளில் அதிக வேலைவாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு சந்தையில் நிலைத்திருக்க ஊழியர்கள் புதிய தொழில்நுட்பத் திறன்களைக் கற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகி வருவதாக தொழில்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்














Click it and Unblock the Notifications